Tamilnadu

மொட்டைமாடியில் காதலியுடன் ரகசிய சந்திப்பு.. தாய் வந்ததால் தப்பிக்க முயன்ற காதலனுக்கு நேர்ந்த சோகம் !

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பகுதியை அடுத்து உள்ளது சின்னக் கொல்லப்பட்டி. இங்கு இருக்கும் தனியார் சட்டக்கல்லூரி ஒன்றில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் வந்து படித்து வருகின்றனர். அந்த வகையில் இங்கு தர்மபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டி அருகே உள்ள காமராஜர் நகரை சேர்ந்த சஞ்சய் (21) என்ற மாணவர் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

சஞ்சய் பெற்றோர் வங்கியில் பணிபுரிந்து வருவதால், சஞ்சய் அவரது நண்பர்களுடன் சேர்ந்து தனியாக வீடு எடுத்து தங்கி படித்து வந்துள்ளார். இவருடன் கரூர் பகுதியை சேர்ந்த 18 வயது மாணவி ஒருவரும் படித்து வந்துள்ளார். அந்த மாணவி தனது பெற்றோருடன் ஒரு அப்பார்ட்மென்டில் தங்கி படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சஞ்சய் மற்றும் அந்த மாணவி இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சம்பவத்தன்று சஞ்சய் மாணவியை சந்திக்க நினைத்துள்ளார். அதன்படி சம்பவத்தன்று இரவு, வெளியில் சென்று வருவதாக நண்பர்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். அப்போது மாணவி வீட்டுக்கு சென்ற சஞ்சய், அவரை போனில் தொடர்பு கொண்டு அவரது அப்பார்ட்மெண்ட்டின் மொட்டை மாடிக்கு அழைத்துள்ளார்.

மாணவியும் சஞ்சயை காண மொட்டை மாடிக்கு வந்துள்ளார். இருவரும் அங்கே பேசிக்கொண்டிருந்தனர். அப்போது எதேர்ச்சியாக மாணவியின் தாயார், மாணவியை தேடி மாடிக்கு வந்துள்ளார். இதனை கண்ட மாணவியும் சஞ்சயும் பயந்து போய் ஒளிந்து கொள்ள நினைத்தனர். இதனால் சஞ்சய் இருட்டில் மாடியின் சுற்றுச்சுவர் வழியாக கீழே இறங்க முயன்றுள்ளார்.

அப்போது இருட்டாக இருந்ததால், அவரது கால் இடறி சுமார் 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் சஞ்சய் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனே இதுகுறித்து காவல்துறை மற்றும் ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த சஞ்சயின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது கொலையா? தற்கொலையா? விபத்தா? என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதலியுடன் ரகசியமாக சந்தித்தபோது, திடீரென்று காதலியின் தாய் வந்ததால், தப்பிக்க முயன்ற காதலன் 50 அடி உயரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!

Also Read: “4 வயது குழந்தையை கொலை செய்த பாட்டி.. போலிஸ் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்” - பின்னணி என்ன ?