Tamilnadu

ரோகிணி தியேட்டர் தண்ணீர் தொட்டியில் அழுகிய நிலையில் கிடந்த ஊழியர் சடலம்.. போலிஸ் தீவிர விசாரணை!

சென்னை கோயம்பேடு அருகே ரோகிணி திரையரங்கம் உள்ளது. இங்கு வெங்கடேசன் என்பவர் பிளம்பர் மற்றும் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 26 தேதிக்குப் பிறகு வேலைக்கு வரவில்லை. அதோடு இவர்பற்றிய எந்த தகவலும் யாருக்கும் தெரியவில்லை.

இந்நிலையில் ரோகிணி திரையரங்கத்திற்கு தண்ணீர் இறக்க இன்று லாரி வந்துள்ளது. அப்போது, ராமலிங்கம் என்பவர் தண்ணீர் தொட்டியைத் திறந்து பார்த்தபோது அதில் அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதுகுறித்து உடனடியாக கோயம்பேடு போலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். பிறகு அங்கு வந்த போலிஸார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் தண்ணீர் தொட்டியில் இருந்த சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர்.

பின்னர் அந்த சடலம் யார் என்பது குறித்து போலிஸார் நடத்திய விசாரணையில் ரோகிணி திரையரங்கில் வேலை பார்த்து வந்த வெங்கடேசன் என்பது தெரியவந்தது.

மேலும் வெங்கடேசன் குடிபழக்கத்திற்கு அடிமையானவர் என்பதால், மது போதையில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தாரா? அல்லது யாரேனும் அவரை தள்ளிவிட்டு கொலை செய்தனரா? என்ற கோணத்தில் கோயம்பேடு போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: 82 நாடுகளில் கைதிகளாக இருக்கும் 8343 இந்தியர்கள்: நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு சொன்ன அதிர்ச்சி தகவல்!