Tamilnadu

மெரினாவில் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்ட விவகாரம் : கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலிஸார் எச்சரிக்கை!

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் சிலை பின்புறம் 20க்கும் மேற்பட்ட வாலிபர்கள் கட்டை மற்றும் கத்தியால் ஒரு வாலிபரைத் துரத்திச் சென்று தாக்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இது குறித்து மெரினா போலிஸார் மற்றும் திருவல்லிக்கேணி துணை ஆணையர் சேகர் தேஷ்முக் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் வாலிபர்கள் தாக்கிக் கொண்டதில் மூன்று பேருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இவர்கள், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதனைத் தொடர்ந்து இந்த மோதல் குறித்து போலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மோதலில் ஈடுபட்ட வாலிபர்கள், மாநில கல்லூரியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

அதோடு, பி.ஏ எகனாமிக்ஸ் மூன்றாம் ஆண்டு படிக்கும் சூர்யபிரகாஷ், நவீன், சூர்யா அகியோரை அதே கல்லூரியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கத்தி மற்றும் கட்டையால் துரத்திச் சென்று தாக்கியது தெரியவந்தது. இந்த தாக்குதல் நடத்திய மாணவர்கள் யார் என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபோன்று மாணவர்களுக்குள் ஏற்படக்கூடிய மோதல் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் விதமாக போலிஸார் மாற்று உடைகள் அணிந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் போலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் தாக்குதலில் ஈடுபட்ட தனூஷ், ரூபன் ஆகிய இரண்டு மாணவர்களை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்ற மாணவர்களைத் தேடி வருகின்றனர்.

Also Read: “சீமான் கலைஞரின் பேனா சிலையை உடைக்கும் வரை எங்கள் கைகள் பூப்பறிக்குமா?” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி !