Tamilnadu

ஹோட்டலில் பார்சல் வாங்கி வீட்டில் பரோட்டா சாப்பிட்ட இளைஞர் திடீர் உயிரிழப்பு: உணவு பிரியர்கள் அதிர்ச்சி!

சென்னை வியாசர்பாடி சர்மா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இளைஞரான இவர் கொளத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஏஜென்ட்டாக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு கார்த்திக் சாலையோர கடை ஒன்றில் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பரோட்டா பார்சல் வாங்கி சென்றுள்ளார். இதையடுத்து வீட்டில் இவர் வாங்கி வந்த பார்சலை பிரித்து அனைவரும் பரோட்டா சாப்பிட்டு உள்ளனர். பிறகு அனைவரும் தூங்கியுள்ளனர்.

இதையடுத்து சில மணி நேரத்திலேயே கார்த்திக் வாந்தி எடுத்துள்ளார். மேலும் அப்படியே மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரை மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கார்த்திக் பரோட்டா சாப்பிட்ட பின்பு குளிர் பானம் அருந்தியதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் கார்த்திக்கைத் தவிர பரோட்டா சாப்பிட்ட குடும்பதில் உள்ள மற்றவர்களுக்கு எதுவும் ஆகவில்லை. அவரின் உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பின் முழுமையான காரணம் தெரியவரும் என போலிஸார் தரப்பில் கூறப்படுகிறது.

தொடர்ச்சியாகப் பிரியாணி, பரோட்டா சாப்பிட்டு இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது உணவு பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Also Read: ரூ.25 லட்சம் மதிப்புள்ள நகையுடன் வடமாநில தொழிலாளி தலைமறைவு.. கோவையில் அதிர்ச்சி !