Tamilnadu

விமான நிலையத்தில் சுருண்டு விழுந்த கணவர்: அமெரிக்காவில் உள்ள மகனை பார்க்க முயன்ற தம்பதிக்கு நேர்ந்த சோகம்

அமெரிக்காவில் உள்ள மகனை பார்க்க செல்வதற்கு, விசாவுக்காக சென்னை வந்த தெலுங்கானா தம்பதி, விசா பணியை முடித்துவிட்டு, ஹைதராபாத் செல்ல சென்னை விமான நிலையம் வந்தபோது, கணவர் விமானநிலையத்தில் சுருண்டு விழுந்தது உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் கம்மம் பகுதியைச் சேர்ந்தவர் துளசி சுகுணா பிரசாத் (65). இவருடைய மனைவி கலவாலா கல்யாணி (59). இவர்களின் மகன் அமெரிக்காவில் வசிக்கிறார். இதையடுத்து மகனை பார்த்ததற்காக அமெரிக்கா செல்வதற்கு, இவர்கள் விசாவுக்கு விண்ணப்பித்தனர்.

அதன் நேர்காணலுக்காக, கணவன், மனைவி இருவரும், கடந்த 21 ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தில் இருந்து, விமானத்தில் சென்னை வந்தனர். சென்னையில் விசாவுக்கான பணிகளை முடித்துவிட்டு, இன்று காலை விமானத்தில் ஹைதராபாத் செல்வதற்காக சென்னை உள்நாட்டு விமானநிலையம் வந்தனர்.

சென்னை உள்நாட்டு விமான நிலையம், பயணிகள் புறப்பாடு, கேட் எண் 14 அருகே, போர்டிங் பாஸ் சரி பார்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது துளசி சுகுணா பிரசாத் திடீரென மயங்கி விழுந்தார். உடனே மனைவி பதட்டத்துடன் பதறி துடித்தார்.

இதையடுத்து துளசி சுகுணா பிரசாத்தை, சென்னை விமான நிலையத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து சென்னை விமான நிலைய போலிஸூக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு 174 பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். துளசி சுகுணா பிரசாத், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்பால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மேலும் பிரேத பரிசோதனை முடிந்து, உடலை தெலுங்கானா மாநிலம் எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள மகனை பார்க்க செல்வதற்கு, விசாவுக்காக சென்னை வந்த தந்தை விமானநிலையத்தில் சுருண்டு விழுந்தது உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 72 பேரை பலிகொண்ட விமான விபத்து.. LIVE VIDEO வெளியிட்ட இந்திய பயணி.. உறையவைக்கும் பயணிகளின் அலறல் !