Tamilnadu

ஆடு திருடும் கும்பலை தேடிய போது மான் வேட்டையில் ஈடுபட்ட 5 பேர் கைது: போலிஸார் எடுத்த அதிரடி நடவடிக்கை!

பெரம்பலூர் மாவட்ட காவல்துறையில், சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்கள் , மணிகண்டன், மாரிமுத்து, சிவக்குமார், ஆகியோ தலைமையிலான தலைமை காவலர்கள் இளவரசன், கார்த்திகேயன், மோகன் ஆகியோரர் கொண்ட போலிஸ் கிரைம் டீம் குழுவினர் இன்று பெரம்பலூர், செட்டிகுளம், சாலையில், தம்பிரான்பட்டி பகுதியில் ஆடு திருடும் கும்பலை தேடி, காவல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த டாடா மேஜிக் ஆட்டோ வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், ரெங்கநாதபரம் கிராமத்தைச் சேர்ந்த வேட்டை மணி என்கிற மணிகண்டன்,அதே கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன், வெள்ளனூர் கிராமத்தைசச் சேர்ந்த கோவிந்தன், மணி, கார்த்தி ஆகிய 5 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர்.

மேலும் அந்த வாகனத்தை சோதனை செய்ததில் அவர்களிடம் உரிமம் இல்லாத 2 நாட்டு துப்பாக்கிகள் மற்றும் வேட்டையாடிக் கொல்லப்பட்டு உயிரிழந்த 3 மான்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்த 2 நாட்டு துப்பாக்கி மற்றும் ஆட்டோ ஆகியவற்றுடன் ஐந்து பேரையும் கைது செய்து, பெரம்பலூர் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இவர்கள், பெரம்பலூர் எல்லைப் பகுதியான திருச்சி மாவட்டம் எதுமலை வனச்சரகத்தில் மான் வேட்டையில் ஈடுபட்டவர்கள் என்பதால், திருச்சி வனத்துறை அதிகாரிகளை வரவழைத்து அவர்களிடம் நாட்டு துப்பாக்கி மற்றும் ஆட்டோ வாகனத்துடன் 5 பேரையும் ஒப்படைத்தனர்.

Also Read: “நொறுங்கிய 30 எலும்புகள்..” - விபத்தில் சிக்கிய அவெஞ்சர்ஸ் நடிகரின் தற்போதைய நிலை என்ன ?