Tamilnadu

”திராவிட மாடல் அரசுக்கு முற்றிலும் எதிராக இருக்கும் ஆளுநர்”: அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடப்பாண்டு முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. கூட்டத் தொடரின் முதல் நாள் என்பதால் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றி தொடரை தொடங்கி வைத்தார். அப்போது தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையில் இருந்த சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லூயிர் ஓம்புதல், திராவிட மாடல், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்துள்ளார்.

இவரின் இந்த நடவடிக்கைக்கு தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அரசால் அச்சடிக்கப்பட்டு பேரவையில் அங்கீகரிக்கப்பட்ட உரையை மட்டுமே அவைக்குறிப்பில் இடம் பெறவேண்டும் என்ற தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்தார். பின்னர் முதலமைச்சர் கொண்டுவந்த இந்த தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

அதோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த தீர்மானத்தைக் கொண்டு வரும்போது அவையில் இருந்து பாதியிலேயே ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். மேலும் கூட்டத் தொடர் முடியாமல் தேசியகீதம் இசைப்பதற்கு முன்பே வெளியேய செயல், ஆளுநரே தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டது போன்று உள்ளது.

பின்னர் இன்றைய கூட்டத் தொடர் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு," ஆளுநர் உரை என்பது அரசின் கொள்கைகளை எடுத்துச் சொல்லும் உரை. ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே கருத்து மோதல் இருந்தாலும், அவர் பேரவைக்கு வந்த போது முழு மரியாதை அளித்தோம். சமூக நீதி, சமத்துவம் போன்ற வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்துள்ளார். திராவிட மாடல் அரசுக்கு முற்றிலும் எதிராகவே ஆளுநரின் செயல் உள்ளது.

அரசின் உரை ஆளுநருக்கு 5ம் தேதியே முறையாக அனுப்பி வைக்கப்பட்டது. ஒப்புதல் அளித்துவிட்டு, பேரவையில் மாற்றி வாசிப்பது ஏற்கத்தக்கதல்ல. ஆளுநர் ஒப்புதல் அளித்தபிறகே உரை அச்சிடப்பட்டது. இப்போது இப்படி ஆளுநர் நடந்து கொள்வது ஏன்?" என தெரிவித்துள்ளார்.

Also Read: தேசிய கீதம் புறக்கணிப்பு : “அவர் ஆளுநரா? எதிர்கட்சியா ?” - ஆர்.என்.ரவியை விளாசிய CPIM மாநில செயலாளர் !