Tamilnadu

“எங்கள பாத்துக்க யாருமே இல்ல..” - மனம் நொந்து விபரீத முடிவெடுத்த வயது முதிர்ந்த தம்பதியினர் !

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அரியாகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (65) - பாப்பா (60) தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில், இருவருக்குமே திருமணம் செய்து வைத்துவிட்டனர்.

இவர்களது இரண்டு மகள்களும் திருமணம் முடிந்து அவரவர் குடும்பத்தோடு தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். திருமணத்திற்கு பிறகு இவர்களது இரு மகள்களும் பெற்றோரை அடிக்கடி வந்து சந்திப்பதில்லை என்று கூறப்படுகிறது.

அதோடு இருவரும் தங்களது பெற்றோரை கவனிக்காமல், தாங்கள் உண்டு தங்கள் குடும்பம் உண்டு என்று இருந்துள்ளனர். இதனால் இவர்கள் இருவரும் அருகிலிருந்த அப்பளம் போடும் தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வந்துள்ளனர். மேலும் கூலி வேலையில் கிடைக்கும் கிடைத்த பணத்தை வைத்து, தம்பதியினர் வாழ்ந்து வந்துள்ளனர்.

இப்படி இருக்க, இருவருக்கு வயதானதால், உடல்நிலை கோளாறு ஏற்பட்டுள்ளது. எனவே இருவரும் வேலைக்கு செல்வதை தவிர்த்து வந்துள்ளனர். மேலும் இதனால் வீட்டில் பணக்கஷ்டமும் இருந்து வந்துள்ளது. அதோடு உடல் பிரச்னை உள்ள பெற்றோரை இரு மகள்களும் வந்து கவனித்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மனம் நொந்துபோன வயது முதிர்ந்த தம்பதியினர், நேற்றைய முன்தினம் (04.01.2023) இரவு வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்துள்ளனர். இவர்கள் இருவரும் அலங்கோலத்தில் கிடப்பதை கண்ட முருகேசனின் தம்பி, இருவரையும் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றார்.

அங்கே இவர்கள் இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரது உடலையும் மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து இதுகுறித்து காவல்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்வு அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!

Also Read: BSNL வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. - வரப்போகிறது 4G, 5G சேவை.. எப்போது தெரியுமா ?