Tamilnadu

ரூ.33 லட்சம் மோசடி.. அதிமுக முன்னாள் MLA மற்றும் மனைவி - மகள் மீது வழக்குப் பதிவு செய்து போலிஸ் விசாரணை!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே புத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசனின் மனைவி தங்க தேவிகா பெயரில் புத்தேரி பகுதியில் உள்ள நிலத்தை ரூ. 75 லட்சத்திற்குக் கிரயம் பேசி முடித்துள்ளார்.

மேலும், அந்த நிலம் நாகர்கோவில் ஜோஸ்வா தெருவை சேர்ந்த பினோ தேவகுமார் பெயருக்குத் தங்க தேவிகா பவர் எழுதிக் கொடுத்து இருக்கிறார். அதனடிப்படையில் செந்தில்குமார், பினோ தேவ குமார் மற்றும் நாஞ்சில் முருகேசன் மகள் ஶ்ரீலிசா ஆகியோரிடம் இரண்டு தவணையாக ரூ. 33 லட்சம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து மீதி தொகையைச் செலுத்திடவும் செந்தில்குமார் தயாராக இருந்துள்ளார். ஆனால் நிலத்தை அவரது பெயரில் எழுதி கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர். இதனிடையே அந்த நிலத்தைச் செந்தில் குமாருக்கு கொடுக்காமல், பினோ தேவகுமார் தனது பெயருக்கு மாற்றம் செய்து விட்டார்.

பின்னர்தான் இவர்களால் தான் ஏமாற்றப்பட்டதைத் தெரிந்த செந்தில் குமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் செய்துள்ளார். இந்த புகாரை அடுத்து ரூ. 33 லட்சம் மோசடி செய்த அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன், அவரது மனைவி தங்க தேவிகா, மகள் ஸ்ரீலிஜா(அதிமுக மாமன்ற உறுப்பினர்) மற்றும் பினோ தேவகுமார் ஆகிய நான்கு பேர் மீதும் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: 2 குழந்தைகளை ஆற்றி வீசி தற்கொலை செய்து கொண்ட தம்பதி: விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி காரணம்!