Tamilnadu

“கொடிய விஷம் கொண்ட பாம்புகள்.. குரங்கு என 66 உயிரினங்கள் கடத்தல்” : சென்னை விமான நிலையத்தை அலறவிட்ட பயணி!

தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக் நகரில் இருந்து, பயணிகள் விமானம் ஒன்று, இன்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர்‌

அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த இரண்டு பயணிகள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் பெரிய பிளாஸ்டிக் கூடைகளை எடுத்து வந்தனர். சுங்க அதிகாரிகள் சந்தேகத்தில் அவர்களை நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்கள். அவர்களின் கூடைகளை, சுங்க அதிகாரிகள் திறந்து பார்த்து சோதனை இட்டனர்.

அப்போது பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த இரண்டு பேர் வைத்திருந்த பிளாஸ்டிக் கூடைகளில், உயிருடன் கூடிய பாம்புகள் நெளிந்து கொண்டு இருந்தன. இரண்டு பேரின் கூடைகளுக்குள், தாய்லாந்து நாட்டு வனப்பகுதியில் காணப்படும் அரிய வகை மலைப்பாம்பு குட்டிகள் 40 மற்றும் நாகப் பாம்புகளின் குட்டிகள் 13, அறிய வகை குரங்கு குட்டிகள் 5, அபூர்வ உயிரினங்கள் 8, மொத்தம் 66 உயிரினங்கள் மற்றும் விலங்குகள் இருந்தன.

இதை அடுத்து சுங்க அதிகாரிகள் இரண்டு பேரையும் வெளியில் விடாமல் ஒரு அறையில் அடைத்து வைத்தனர். அவர்களின் கூடைகளையும் பாதுகாப்பாக தனிமைப்படுத்தி வைத்தனர். அதோடு சென்னை பெசன்ட் நகரில் உள்ள, ஒன்றிய வனவிலங்குகள் குற்றப்பிரிவு துறைக்கு அவசர தகவல் அனுப்பினார். இதை அடுத்து ஒன்றிய வனவிலங்குகள் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விரைந்து வந்தனர்.

தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட உயிரினங்கள், விலங்குகளை ஆய்வு செய்தனர். இந்த விலங்குகளில், கொடிய விஷம் உடைய நாகப்பாம்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த விலங்குகள், இந்தியாவிற்கு சம்பந்தம் இல்லாதவை. இவைகள் தாய்லாந்து, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா வனப்பகுதிகளில் காணப்படுபவைகள். இதைப் போன்ற விலங்குகள், உயிரினங்கள் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு அனுமதியே கிடையாது.

இவைகளை இந்தியாவுக்கு அனுமதித்தால் பெருமளவு வெளிநாட்டு நோய் கிருமிகள் இந்தியாவில் உள்ள, உயிரினங்களுக்கும், மனிதர்களுக்கும் பரவி, பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்று அவர்கள் கூறினார்கள். இதை அடுத்து இந்த 66 உயிரினங்களையும் நாளை புதன்கிழமை அதிகாலை சென்னையில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் செல்லும் பயணிகள் விமானத்தில், தாய்லாந்து நாட்டிற்கு திருப்பி அனுப்ப உத்தரவிட்டனர்.

கடத்தல் ஆசாமிகள் இரண்டு பேரையும் கைது செய்து, அவர்களை ஜாமினில் வெளிய வர முடியாத, கடுமையான பிரிவுகளில், வழக்குகள் வழக்குகள் பதிவு செய்யவும் உத்தரவிட்டனர். தாய்லாந்து நாட்டிலிருந்து சமீப காலமாக பெருமளவு, இதை போல் அபாயகரமான உயிரினங்கள், விமானங்களில் சென்னைக்கு வரப்படுவதாகவும், இதை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற, உயர் மட்ட ஆலோசனை கூட்டம், சென்னை விமான நிலையத்தில் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு நடந்தது.

டெல்லியில் இருந்து சென்னை வந்த, வனக்குற்ற பிரிவு உயர் அதிகாரி தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், இனிமேல் இதே போல் அபாயகரமான இந்தியாவில் நோய் கிருமிகள் பரப்பக்கூடிய வனவிலங்குகள் உயிரினங்கள் சட்டவிரோதமாக சென்னைக்கு கடத்திட்டு வர அனுமதிக்க கூடாது.

விமான நிறுவன அதிகாரிகள் ஊழியர்கள், பயணிகள் விமானங்களில் ஏறும் போது, அவர்கள் கைகளில் எடுத்து வரும் லக்கேஜ்களில் இதே போல் அபாயகரமான பொருள் உயிரினங்கள் எதுவும் இருக்கிறதா? என்பதை முழுமையாக ஆராய வேண்டும்.

அதையும் மீறி கொண்டு வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். விமானங்களில் ஏறும் இடங்களிலேயே, தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றெல்லாம் முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஐந்து நாட்களில் ஒரே விமானத்தில் இரண்டு பயணிகள், இதுவரை இல்லாத அளவு 66 அபாயகரமான பாம்புகள் உட்பட உயிரினங்களை ஒரே நேரத்தில் கடத்தி வந்த சம்பவம், சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சவால் விடுவது போல் அமைந்துள்ளது. இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: “பல பெண்களுடன் தொடர்பு..” -20 வயது நடிகை தற்கொலை வழக்கு : கைது செய்யப்பட்ட காதலன்.. நடந்தது என்ன ?