Tamilnadu

நெருங்கி வரும் New Year, பொங்கல்.. பொதுமக்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுத்துள்ள வேண்டுகோள் என்ன?

உலகில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து தமிழ்நாட்டில் கொரோனா பரவாமல் இருக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.

அதன் முதற்கட்டமாகச் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்குவது தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா தொற்று ஏற்பட்டால் எதிர்கொள்வது தொடர்பான வழிமுறைகளை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளது குறித்து இரண்டு நாட்களில் அறிக்கை அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனையில் மட்டும் கொரோனா சிகிச்சைக்கான 72 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. சாதாரண படுக்கைகள் 51945 மற்றும் 17542 ஆக்சிஜன் வசதி உடைய படுக்கைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1954 மெட்ரிக் டன் அளவிற்கு ஆக்ஸிஜன் கையிருப்பு உள்ளது. 6 மாதத்திற்குத் தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளதால் பொதுமக்கள் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்குத் தொடர்ந்து ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இது வரை, யாருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட வில்லை. புத்தாண்டு, சமய விழாக்கள், அரசியல் கட்சிகள் நடத்துகின்ற நிகழ்ச்சிகள் எதற்கும் கட்டுப்பாடுகள் இல்லை. இருப்பினும் பொதுமக்களுக்கு சுயக்கட்டுப்பாடுடன் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: துணிவு ப்ரோமோஷனுக்காக துணிவோடு களமிறங்கிய படக்குழு.. SKY DIVING மூலம் வேற லெவலில் விளம்பரம் ! VIDEO