Tamilnadu

“அண்ணாமலை அறியாமையில் பேசுகிறாரா ? இல்லை வேண்டுமென்று பிதற்றுகிறாரா?” : வெளுத்து வாங்கிய திருமாவளவன் !

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கானத்தூரில், விடுதலை சிறுத்தைகள் கட்சி- கிறித்துவ சமூக நீதிப்பேரவை கொண்டாடும் கிறித்துவப் பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன்.எம்.பி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினரும் கிறிஸ்தவ நல்லென்ன இயக்க தலைவருமான இனிக்கோ இருதயராஜ், வி.ஜி.பி சந்தோசம், சிறுவர்கள், வி.சி.க.வினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் பேசிய திருமாவளவன், “கிறிஸ்துவம் என்பது ஆன்மீகத்தை மட்டும் இல்லாமல் சகோதரத்தை போதிக்கிறது. சாதி, மதம், நாடு என வேற்றுமை பார்க்காமல் அவர்கள் நலனுக்காக ஜெபிக்க கூடிய நாகரீகத்தை வளர்த்துருக்கிறது. 2000 ஆண்டுகளில் 200 நாடுகளில் கிறிஸ்தவம் பரவி வருகிறது.

இந்தியாவில் காலடி எடுத்த வைத்த பிறகு தான் கல்வி, மருத்துவம், சுகாதாரம் கிடைத்தது. சகோதரத்துவம், சுதந்திரம் கிடைத்தது. கிறிஸ்தவம் வந்த பிறகு தான் பள்ளிக்கூடம், மருத்துவமனை வந்தது. பழைய சட்டம் தூக்கி எறியப்பட்டன, புதிய சட்டங்கள் உருவாகின. இதனால் தான் சனாதனிகளுக்கு இஸ்லாமியம் மீதும், கிறிஸ்தவம் மீதும் கோபம் வருகிறது.

சமூக ஒழுங்கை ஒட்டுமொத்தமாக புரட்டி போடும் வகையில் பிரிட்டீஷ் ஆட்சி இருந்தது. அதனால் இன்றும் அவர்கள் பதறிக் கொண்டிருக்கிறார்கள். இரு மதங்களும் சகோதரத்துவத்தை கொண்டுள்ளதால் தான் உலகம் முழுவதும் பரவி இருக்கிறது. இந்தியாவையே இன்னும் இந்து நாடு என அறிவிக்க முடிகிறதா, அறிவிக்க முடியாது. இது மதமாக இல்லை, சகோதரத்துவத்தை போதிக்கவில்லை. பாகுபாடுகளை உயர்த்தி பிடிக்கிறது.

மதச்சார்பின்மைக்கும் புதிய வியாக்கனம் சொல்கிறார் பா.ஜ.க தலைவர் அறியாமையில் பேசுகிறாரா வேண்டுமென்று பிதற்றுகிறாரா தெரியவில்லை, மதச்சார்பின்மை என்பதற்கு அவர் சொல்லுகிற விளக்கம் அவரவர் மதத்தை பின்பறற வேண்டும், குடிமக்கள் மதம் சார்ந்து இருக்கலாம், இந்திய அரசு மதச்சார்பற்ற அரசாக இருக்க வேண்டும். குடிமக்களை குடிமக்களாக மட்டும் பார்க்க வேண்டும், கருத்தை, வரலாற்றை, உண்மையை திரிப்பது பாஜக பேசும் அரசியல் அதனால் தான் விமர்சிக்கிறோம்.

நாடாளுமன்றத்தில் பேசும் போதும் ஒரு சார்பின்மை பற்றி பேசினேன். 20ம் நூற்றாண்டில் யேசு புரட்சியாளர் அம்பேத்கர், என்ன பேசினாரோ அதையே தான் 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி அதிகாரத்தை எதிர்த்து பேசினார். யேசு பெருமான் 32 ஆண்டுகள் தான் வாழ்ந்தார், 3 ஆண்டுகள் மட்டுமே போதனைகள் செய்தார். 29 ஆண்டுகள் சராசரி மனிதனாக வாழ்ந்தார். 3 ஆண்டுகள் போதித்த போதனைகள் இதுவரை உலகை ஆள்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.