Tamilnadu

மரத்தின் மீது மோதி நொறுங்கிய கார்.. சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய நண்பர்களுக்கு நேர்ந்த கொடூரம்!

தென்காசி மாவட்டத்தின் சுற்றுலா ஸ்தலமான குற்றால அருவிகளில் தற்போது நீர் வரத்து இருப்பதால் 24 மணி நேரமும் குளித்து மகிழ்வதற்காக வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் நெல்லை சி.என்.கிராமத்தைச் சேர்ந்த சங்கர், தனது நண்பர்களான கார்த்திகேயன், லெனின், வெங்கடேஷ் ஆகியோருடன் நேற்று இரவு நெல்லையில் இருந்து காரில் பழைய குற்றால அருவிக்கு வந்துள்ளார்.

அங்கு இரவு முழுவதும் மகிழ்ச்சியாக குளித்து விட்டு இன்று அதிகாலை பழைய குற்றாலத்தில் இருந்து 4 பேரும் காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை சங்கர் ஓட்டிச் சென்றுள்ளார்.

இந்நிலையில் கார் திடீரன கட்டுப்பாட்டை இழந்து சாலையோர இருந்த மரத்தில் பயங்கரமாக மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் குற்றாலம் போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த சங்கரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் காயம் அடைந்த கார்த்திகேயன், லெனின், வெங்கடேஷ் ஆகிய 3 பேரும் தென்காசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் தீவிர சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுப்பிவைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலாவிற்கு வந்து நண்பர்கள் விட்டு வீடு திரும்பியபோது மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: TV Remote பேட்டரியை விழுங்கிய 2 வயது சிறுவன்.. 20 நிமிடத்தில் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள்!