Tamilnadu

பிரபல ரவுடியை கைது செய்த போலிஸ்.. விசாரணையில் பா.ஜ.க நிர்வாகி என்பது அம்பலம்!

அகில இந்திய அளவிலே ரவுடிகளின் கூடாரமாக பா.ஜ.க மாறிக் கொண்டிருக்கிறது. தேடப்படும் கொலை-கொள்ளை குற்றவாளிகளின் சரணாலயமாகி விட்டது. சிறைக்குச் சென்று சிறை உடை அணிய வேண்டியவர்கள் காவித்துண்டு போர்த்திக் கொண்டு, காவல் துறையை ஏமாற்றலாம் என நினைத்துக் கொண்டு பா.ஜ.கவில் அடைக்கலம் தேடி வருகின்றனர்.

தமிழ்நாட்டிலும், ரவுடிகள் போலிஸாரிடம் இருந்து தப்பித்துக் கொள்ள பா.ஜ.கவில் இணைந்து வருகின்றனர். இவர்கள் ரவுடிகள் என்று தெரிந்தே பா.ஜ.கவும் அவர்களை கட்சியில் சேர்த்துக் கொள்கிறது. பா.ஜ.கவின் தலைவராக இருந்த தற்போதைய ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் இருந்தபோது பல ரவுடிகள் கட்சியில் இணைந்தனர்.

புளியந்தோப்பு தாதா அஞ்சலை, கல்வெட்டு ரவி, புதுவை எழிலரசி, சீர்காழி சத்தியா, சேலம் முரளி, நெற்குன்றம் சூர்யா, புதுவை சோழன், புதுவை விக்கி, பாம் வேலு, குரங்கு ஆனந்த் என இந்த ரவுடிகள் பட்டியல் நீள்கிறது.

இவர்கள் பா.ஜ.கவின் சேர்ந்தால் தப்பித்துக் கொள்ளலாம் என நினைத்தாலும் தமிழ்நாடு போலிஸார் அவர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த பிரபல ரவுடி டோக்கன் ராஜாவை , துரைப்பாக்கத்தில் வைத்து போலிஸார் கைது செய்தனர்.

இவர் பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் சிடி மணியின் கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டோக்கன் ராஜா மீது 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு பா.ஜ.க கட்சியில் இணைந்துள்ளார். மேலும் பா.ஜ.க கட்சியின் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளராக பதவி வகித்து வருவதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

Also Read: தங்க முட்டை இடும் வாத்தை வெட்ட மனம் இல்லையா ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு?.. ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கேள்வி!