Tamilnadu

தினமும் செய்தித் தாள்களைப் படியுங்கள் எடப்பாடி பழனிச்சாமி.. அப்பதான்! : அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி!

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையத்தில் ரூ.13.2 இலட்சம் மதிப்பீட்டில் செயற்கை நீரூற்று - மின்விளக்குகள் பொருத்தி அழகு படுத்தும் பணியினை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்கள். மேலும் கரூரில் ரூ. 40 கோடி மதிப்பிலான புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "கரூர் மாவட்டத்திற்கு மட்டும் ரூ. 3000 கோடி அளவிற்கான திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கரூர் திருமாநிலையூர் பகுதியில் அமைந்து வரும் புதிய பேருந்து நிலையம் பத்து மாதங்களுக்குள் பணிகள் முடிந்து கலைஞர் பெயர் சூட்டப்பட்டு புறநகர் பேருந்து நிலையமாகவும், பயன்பாட்டில் உள்ள பேருந்து நிலையம் நகர பேருந்துகள் இயங்கும் வகையில் செயல்படுத்தப்படும்.

அ.தி.மு.கவினர் தங்களது இருப்பை காட்டிக் கொள்வதற்காக உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். தி.மு.க ஆட்சியில் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என கூறும் அ.தி.மு.கவினர் செய்தித்தாள்களையும், ஊடகங்களையும் தினசரி படித்துப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: 'மொழி இல்லாமல் கலை இல்லை'.. மியூசிக் அகாடமி விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!