Tamilnadu

பா.ஜ.க நிர்வாகி நடத்தும் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. அதிரடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர்!

நாகை அருகே புத்தூர் பகுதியில் தனியார் நர்ஸிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் வெளியூரில் இருந்து படித்து வரும் மாணவிகளுக்காக விடுதி ஒன்றும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இக்கல்லூரியில் உடற்கூறியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் சதீஷ். இவர் கடந்த 10ம் தேதி விடுதியில் தங்கிப் படித்து வரும் மாணவி ஒருவருக்கு செல்போனில் அழைத்துள்ளார். அப்போது அவர், 'உன்மீது புகார் வந்துள்ளது. உன்னிடம் விசாரணை நடத்த வேண்டும். எனது வீட்டிற்கு வா' என கூறியுள்ளார்.

இதைகேட்டு அதிர்ச்சியடைந்த மாணவி, 'சார் நான் கல்லூரிக்கு வரேன்' என கூறியுள்ளார். ஆனால் ஆசிரியர் சதீஷ், 'நீ இப்போதே வீட்டிற்கு வரவேண்டும்' என தொடர்ந்து மிரட்டும் தோணியில் பேசியுள்ளார். அப்போதும் மாணவி தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறியும் ஆசிரியர் விடாமல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

பிறகு ஆசிரியரின் தொல்லை தாங்கிக் கொள்ள முடியாத மாணவி இது குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே மாணவியுடன் ஆசிரியர் பேசிய ஆடியோவை மாவட்ட சமூகநலத்துறைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இது பற்றி அறிந்த சகமாணவிகள் ஆசிரியர் சதீஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறி போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது கல்லூரி நிர்வாகம் மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்ய முயன்றுள்ளது.

இந்த சம்பவம் பற்றி மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்-க்கு தெரியவந்துள்ளது. உடனே அவர் இது குறித்து விசாணை நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து போலிஸார் ஆசிரியர் சதீஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நர்ஸிங் கல்லூரியின் தாளாளராக இருப்பவர் பா.ஜ.க மாவட்ட தலைவர் கார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க நிர்வாகி நடத்தும் கல்லூரியில் ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ‘பறக்கும் அணில்.. ராட்சத பல்லி’ என விமான நிலையத்தை அலறவிட்ட சென்னை பயணி - சூட்கேஸில் சிக்கிய மர்ம பொருள்?