Tamilnadu

அன்று மு.க ஸ்டாலின்-இன்று உதயநிதி: இருவரையும் முதல் முதலாக அமைச்சர் இருக்கையில் அமரவைத்தது யார் தெரியுமா?

தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டதை அடுத்து அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தி.மு.க இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சரவையில் 35 வது அமைச்சராக இன்று பதவியேற்றார். ஆளுநர் ஆர்.என்.ரவி உதயநிதி ஸ்டாலினுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மேடையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் வாழ்த்து பெற்றார். இந்த பதவியேற்பு விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாற்றுக் கட்சித் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சராகப் பதவியேற்ற உடன் உதயநிதி ஸ்டாலின் அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து தலைமை செயலகத்துக்கு வந்த உதயநிதி ஸ்டாலின் அவர்கள், அங்கு அமைக்கப்பட்டுள்ள அமைச்சருக்கான இருக்கையில் உதயநிதி ஸ்டாலினை மூத்த அமைச்சர் துரைமுருகன் அமரவைத்தனர்.

இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினின் தந்தையான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சராக அவரது இருக்கையில் அமர்ந்த புகைப்படத்தையும், உதயநிதி ஸ்டாலினின் இந்த புகைப்படத்தையும் ஒப்பிட்டு வெளியான புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்றபின்னர் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சராக முதன்முறையாக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அப்போது அவரையும் மூத்த அமைச்சரான துரைமுருகன் அமைச்சர் இருக்கையில் அமரவைப்பார். அந்த புகைப்படமும், தற்போது உதயநிதி அமைச்சராக பதவியேற்று எடுக்கப்பட்ட புகைப்படமும் வரவேற்பை பெற்று வருகிறது.

Also Read: ஒவ்வொன்றுக்கும் அனுமதி கேட்க வேண்டி இருக்கு: ஆளுநர்,ஒன்றிய அமைச்சர் முன் ஆதங்கப்பட்ட புதுச்சேரி முதல்வர்!