Tamilnadu

சென்னையில் எப்போது மழை நிற்கும்?.. வானிலை ஆய்வு மையம் கூறியது என்ன?

மாண்டஸ் புயலால் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்தது. மேலும் நேற்று முன்தினம் அதிகாலை மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் கரையைக் கடந்தது. அப்போது 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

இருந்தாலும் தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கடலோர மாவட்டங்களில் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து மாண்டஸ் புயல் கரையைக் கடந்து விட்டாலும், நாளை அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாய்வு பகுதி உருவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை மைய தலைவர் பாலச்சந்திரன், "கேரளாவின் வடபகுதியில் வளிமண்டலத்தின் மேல் சுழற்சி நிலவுகிறது. இது வடக்கு கேரளா, தெற்கு கர்நாடக கடற்கரை பகுதியில் வழியாகத் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்குச் செல்லும்.

நாளை தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். இது வரும் தினங்களில் மேற்கு திசையில் நகர்ந்து இந்தியக் கடற்பகுதியில் விட்டு விலகிச் செல்லும். இதனால் அதனுடைய தாக்கம் அடுத்து வரும் தினங்களில் இருக்காது.

இருப்பினும் இன்று 24 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளை தமிழகம், புதுவை காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் இன்று மிதமான மழையும், நாளை சில இடங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யக் கூடும். பிறகு படிப்படியாக மழை குறையும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: தொடர்ந்து மறுக்கப்படும் வாய்ப்பு.. அழைப்பு விடுத்த அயர்லாந்து அணி: சஞ்சு சாம்சனின் பதில் என்ன?