Tamilnadu

நிறுத்திவைக்கப்பட்ட மின்விநியோகம் மதியத்துக்குள் வழங்கப்படும் -மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி !

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் நள்ளிரவு 2.30 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் வட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.

மாண்டஸ் புயலால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. சென்னையில் அதிகபட்சமாக நுங்கம்பாகத்தில் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. புயல் கரையை கடந்த நிலையில், காற்றின் வேகமும் படிப்படியாக குறையத்தொடங்கியது. சென்னையில் மழை அதிகளவில் பெய்தும் மாநகராட்சி ஊழியர்களின் செயல்பாடு காரணமாக தண்ணீர் எங்கும் தேங்கவில்லை என்றும், சுரங்கப்பாதைகள் தண்ணீர் தேங்காமல் போக்குவரத்துக்கு சீராக உள்ளது என்றும் சென்னை மாநகராட்சி சார்பில் தகவல் வெளியானது.

மேலும், பாதுகாப்பு நடவடிக்கைக்காக நேற்று இரவு நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் இயக்கம் காலை வழக்கம் போல இயக்கப்பட்டதாக போக்குவரத்துக்குதுறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் சாரல் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், புயலால் சேதம் அடைந்த மின்கம்பங்களை ஆய்வு செய்து அவற்றை சரிசெய்து அதன்பின் மின்விநியோகம் வழங்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், இன்று மதியத்திற்குள் 100 சதவீதம் முழுமையாக மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தமிழகம் முழுவதும் 11 ஆயிரம் பணியாளர்கள் மற்றும் சென்னையில் மட்டும் 1,100 மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

Also Read: “2 லட்சம் மின் கம்பங்கள்.. 11,000 பேர் பணியில்” : மாண்டஸ் புயலை எதிர்கொள்ள தயாராரும் மின்சாரத்துறை !