Tamilnadu

வாய்ச் சவடாலை விடுத்து தமிழக மீனவர்களை காப்பாற்றுங்கள் -ஒன்றிய அரசை கண்டித்து தி.க தலைவர் வீரமணி அறிக்கை!

கடலில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்ந்து நடந்துவருகிறது. இரு நாட்களுக்கு முன்னர் கூட தமிழ்நாட்டை சேர்ந்த 24 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், "கடந்த 28 ஆம் தேதி பன்னாட்டுக் கடல் எல்லை அருகில் இந்தியக் கடல்பரப்பில் மீன்பிடித்துக் கொண் டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 24 பேரை இலங்கைக் கடற்படை அத்துமீறி கைது செய்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை நிகழ்த்தும் அட்டூழியங்கள் குறைந்தபாடில்லை.

இந்திய அரசு உடனடியாகத் தலையிட்டு நட வடிக்கை எடுத்து மீனவர்களை மீட்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்திய அரசின் பிரதமருக்கும், வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டு மீனவர்களின்மீதான தாக்குதல்களை ஒன்றிய அரசு தொடர்ந்து கண்டும் காணாமல் இருப்பது நியாயமற்றது. பா.ஜ.க. பதவியேற்ற பிறகு, சீனா அஞ்சுகிறது; பாகிஸ்தான் அஞ்சுகிறது என்று பேசுவதெல்லாம் போலிப் பெருமையே என்பதை இலங்கையின் அத்துமீறல்கள் தொடர்ந்து நிறுவிக் கொண்டிருக்கின்றன. வாய்ச் சவடால் விடுவதைத் தவிர்த்து, குடிமக்களைக் காக்கும் பணியில் உண்மையாக நடந்துகொள்ளட்டும் ஒன்றிய அரசு! " என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: குடிபோதையில் ஹோட்டலையே அடித்து நொறுக்கிய பா.ஜ.க தலைவர் மகன்.. வழக்குப் பதிவு செய்யாத பெங்களூரு போலிஸ்!