Tamilnadu

ஏரியில் குளிக்கச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்.. தாத்தா கண்முன்னே நடந்த சோகம்!

பெரம்பலூர் மாவட்டம் மேலப்பலியூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கண்ணன். இவரது மகன் ஜெயசக்தி. சிறுவன் பத்தாம் வகுப்பு படித்துத் தோல்வியடைந்ததை அடுத்து மறுதேர்வு எழுதுவதற்காகப் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், சிறுவன் ஜெயசக்தி கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்லாநத்தம் பகுதியில் உள்ள தாத்தா சீனிவாசன் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்குச் சிறுவன், தாத்தாவுடன் சேர்ந்து கொண்டு சேலம் அருகே உள்ள தலைவாசல் பகுதியில் மாடு மேய்க்கச் சென்றுள்ளார்.

பின்னர் சிறுவன் அங்குள்ள ஏரியில் குளித்துக் கொண்டிருந்த போது ஆழமான பகுதிக்குச் சென்றதால் சேற்றில் சிக்கி நீச்சலடிக்க முடியாமல் அலறியடித்துள்ளார். இதைப்பார்த்த அவரது தாத்தா அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளார்.

பிறகு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து எறியில் இறங்கி சிறுவனை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த தீயணைப்பு வீரர்களும், போலிஸாரும் ஏரியில் இறங்கி சிறுவனை மீட்க முயற்சியில் ஈடுபட்டனர். பிறகு சிறுவன் உடலை சடலமாக மீட்டனர்.

இதையடுத்து சிறுவன் உடலை மீட்ட போலிஸார் உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் குளித்த சிறுவன் தாத்தாவின் கண்முன்னே நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஆம் ஆத்மி பிரச்சாரத்தில் கல்வீசிய தாக்குதல் நடத்திய பாஜக.. சிறுவனின் காயத்தால் குஜராத்தில் பரபரப்பு!