Tamilnadu

திருடுபோன 17 சவரன் நகை.. 10 நாட்களில் மீட்ட போலிஸ்: கொள்ளையனை சிக்க வைத்த CCTV!

சென்னை நெற்குன்றம் ஜெயராம் நகரைச் சேர்ந்தவர் சரவணன். கார்பென்டர் வேலை பார்க்கும் இருவரும் அவரது மனைவியும் கடந்த 14ம் தேதி வழக்கம்போல் வேலைக்குச் சென்றுள்ளனர். மேலும் இந்த தம்பதிகளின் இரண்டு மகள்களும் பள்ளிக்குச் சென்றுவிட்டனர்.

இதையடுத்து வேலை முடித்து விட்டு சரவணன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் மகள்களின் திருமணத்திற்காக சிறுக சிறுக சேமித்து வந்திருந்த 7 சவரன் நகை மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் உடனே இது குறித்து சரவணன் கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் மதுரவாயல் அபிராமி நகர் பகுதியைச் சேர்ந்த ஆதித்யா என்ற வாலிபர்தான் நகைகளைத் திருடிச் சென்றதை போலிஸார் உறுதி செய்தனர்.

இதையடுத்து தலைமறைவாக இருந்த ஆதித்யாவை போலிஸார் கைது செய்து அவரிடம் இருந்த நகைகளை மீட்டு சரவணனிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட ஆதித்யா பகல் நேரத்தில் திறந்து கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

திருடுபோன நகையை 10 நாட்களில் துரிதமாக செயல்பட்டு மீட்டு கொடுத்த கோயம்பேடு போலிஸாருக்கு சரவணன் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். மேலும் பொதுமக்களும் காவல்துறைக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Also Read: பரோலில் வந்து மனைவியை கொலை செய்த ரவுடி.. 9 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய பின்னணி என்ன? புதுவையில் அதிர்ச்சி!