Tamilnadu

ஜீவனாம்சம் கோரிய வழக்கில் ஆஜரான கணவர்.. நீதிமன்றத்திலேயே மாரடைப்பால் மரணம் - திருச்சியில் நடந்த சோகம் !

திருச்சி குடும்ப நல நீதிமன்றத்திற்கு வழக்கில் ஆஜராக சென்னையில் இருந்து வந்திருந்த, புதுக்கோட்டையை சேர்ந்த அறிவியல் விஞ்ஞானி தியாகராஜன் என்பவர் நீதிமன்றத்தில் திடீர் மாரடைப்பில் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் விஞ்ஞானி தியாகராஜன். புதுக்கோட்டை மாவட்டத்தைச் இவர் நேற்று சென்னையில் நடந்த துக்க நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுள்ளார். பின்னர் சென்னையில் பணியாற்றிவரும் தனது மகனை சந்தித்து விட்டு, திருச்சி வழியாக புதுக்கோட்டை புறப்பட்டுள்ளார்.

இதனிடையே அவருடைய மனைவி தொடர்ந்துள்ள ஜீவனாம்சம் கோரிய வழக்கில் ஆஜராக திருச்சி பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார். பின்னர் அங்கிருந்து விசாரணைக்காக திருச்சி குடும்ப நல நீதிமன்றத்தில் தியாகராஜன் ஆஜரானார். ஜீவனாம்சம் கேட்ட அவருடைய மனைவியும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.

இந்தநிலையில் குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதியும், வழக்கறிஞர்களும் பணியில் இருந்த போது, அவர்கள் முன்னிலையில் நாற்காலியில் அமர்ந்திருந்த தியாகராஜன், திடீரென தரையில் மயங்கி கீழே விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு நாற்காலியில் அமர்த்தினார்கள். உடனடியாக நீதிமன்றத்திற்கு மருத்துவர் வரவழைக்கப்பட்டார்.

தியாகராஜனை பரிசோதனை செய்த மருத்துவர், மாரடைப்பால் தியாகராஜன் உயிரிழந்திருப்பதை உறுதி செய்தார். இதனையடுத்து அவரது உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து திருச்சி அமர்வு நீதிமன்ற காவல் நிலைய போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜீவனாம்சம் கோரிய வழக்கில் ஆஜரான கணவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Also Read: மனைவியின் தம்பியைக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய மாமன்.. துப்பு துலங்கிய போலிஸ் - வெளிவந்த ‘பகீர்’ தகவல்!