Tamilnadu

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பெண்.. ஒரு நாளுக்குப் பின் உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே பாரத பள்ளி மடத்து விளை பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி. பந்தல் கட்டும் தொழிலாளியான இவரது மனைவி புஷ்பபாய். இவர் சம்பவத்தன்று அருகில் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் மூழ்கி மாயமானார்.

இதையடுத்து அப்பகுதியினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த குலசேகரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மாயமான பெண்மணியைத் தேடிவந்தனர். இந்நிலையில் இன்று காலையில் 30பேர் கொண்ட தீயணைப்புத் துறையினர் 3 குழுக்களாகப் பிரிந்த தேடிவந்தனர்.

அப்போது விழுந்த இடத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உடல் ஒன்று மிதப்பது கண்டனர். பிறகு அருகே சென்றுபார்த்தபோது அது மாயமான புஷ்பபாய் என்பது தெரியவந்தது. மேலும் அவர் உயிர் இருப்பதை அறிந்த தீயணைப்புத் துறையினர், புஷ்பபாயை மீட்டு மார்த்தாண்டம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது உடல் நலத்துடன் இருக்கிறார்.

இதையடுத்து தண்ணீரில் இழுத்துச் சென்ற தனது தாயை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினருக்கு, புஷ்பபாயின் மகன் ரமேஷ் நன்றி தெரிவித்தார். மேலும் ஆற்றில் மாயமாகி ஒரு நாள் முழுவதும் தண்ணீரிலிருந்த புஷ்பபாய் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியினரை ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also Read: புனே செல்லவிருந்த பெண் பயணிக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பரபரப்பான சென்னை விமான நிலையம்!