Tamilnadu

"டேய்.. எப்புட்றா..!?" -ஆன்லைன் மோசடி குறித்து புதிய முறையில் விழிப்புணர்வு செய்த தஞ்சை காவல்துறை ! VIRAL

ஆன்லைன் பண மோசடி குறித்து மீம் வடிவில், புதிய முறையில் விழிப்புணர்வு செய்துள்ள தஞ்சை மாவட்ட காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

சமீப காலத்தில் ஆன்லைன் மோசடி என்பது அடிக்கடி நடந்து வருகிறது. அதாவது ஆன்லைன் மூலம் பலரும் தங்கள் பணத்தை இழந்து வருவதாக சைபர் கிரைமில் புகார்கள் குவிந்த வண்ணமாக காணப்பட்டு வருகிறது.

மேலும் இந்த ஆன்லைன் பண மோசடியானது ஒருவரது எண்ணிற்கு பரிசு பொருள் விழுந்துள்ளதாகவும், இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் எனவும் குறுந்தகவல் வரும். அதனை கிளிக் செய்தவுடன் அந்த நபரின் மொபைல் ஹாக் செய்யப்படும். அதோடு அவருக்கே தெரியாமல் அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படும். இதையடுத்து அவர்கள் எண்ணிற்கு அவரது கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வரும்.

இதையடுத்தே தான் ஏமாற்றப்பட்டிருப்பது அந்த நபருக்கு தெரியவரும். இது போன்ற மோசடிகள் நாடு முழுக்க நடைபெற்று வருகிறது. இதற்காக மாநில மற்றும் தேசிய அளவில் விழிப்புணர்வும் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் மக்கள் தங்கள் பேராசை மற்றும் அறியாமையால் இது போன்ற லிங்கை கிளிக் செய்து பணத்தை இழக்கின்றனர்.

அதுமட்டுமின்றி தெரியாத வலைதளங்களிலும் தங்கள் வங்கி கணக்கின் முழு விவரத்தையும் சிலர் குறிப்பிடுகின்றனர். அது போன்ற செயலாலும் சிலர் தங்கள் பணத்தை இழக்க நேரிடுகிறது. இதனால் சைபர் கிரைம் அதிகாரிகள் இது போன்ற வலைதளங்களில் தங்கள் வங்கி விவரங்களை குறிப்பிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

சமீபத்தில் 'லோன் ஆப்' மூலம் அதிகமானோர் ஏமாற்றப்பட்டுள்ளனர். அதோடு தற்கொலையும் செய்துள்ளனர். இது போன்ற லோன் ஆப்பில், பணத்தை செலுத்தவில்லை என்றால், நமது மொபைல் ஹாக் செய்யப்பட்டு அவரது மொபைல் டேட்டாக்கள் திருடப்பட்டு மர்ம நபர்கள் மிரட்டி பணம் பறித்து வருகின்றனர். இது போன்ற சம்பவங்களில் பல்வேறு மாநிலங்களில் பலரும் சிக்கி தற்கொலை செய்துகொண்டு உயிரை விட்டுள்ளனர்.

இதுபோன்ற சம்பவங்கள் நேராமல் இருக்க தமிழக அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் காவல்துறையும் அதற்கான விழிப்புணர்வு செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்ட காவல்துறையினர், தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் மீம் வடிவிலான விழிப்புணர்வு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், அண்மையில் சிறுவன் ஒருவன் கையில் ரப்பர் பேண்டை மாட்டிக்கொண்டு மேஜிக் செய்வதாக கூறி வீடியோ ஒன்று வெளியானது. அதில் "டேய்.. எப்புட்றா.. இது கைல வந்தது.." என்று அந்த சிறுவன் பேசியிருப்பார்.

இதனை தங்கள் பாணியில் "தெரியாத வலைதளங்களில் வங்கி கணக்கின் விவரங்களை டைப் செய்யும்போது.. டேய்.. எப்புட்றா.. எல்லா காசும் போய்ட்டு..?" என்று குறிப்பிட்டு மீம் வடிவில் விழிப்புணர்வு செய்துள்ளனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பொதுமக்களிடம் இது பெரும் பாராட்டை பெற்று வருகிறது.

Also Read: மகளை கால்வாயில் தள்ளி ஆணவக்கொலை செய்த தந்தை.. தாய் மூலம் வெளிவந்த உண்மை.. கர்நாடகாவில் அதிர்ச்சி !