Tamilnadu

ஆட்டோவில் கடத்தப்பட்ட சிறுமி.. ஒரு மணி நேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த சென்னை போலிஸ்!

சென்னை தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் திருமலை நகரை சேர்ந்தவர் வினோத். இவர் பெருங்களத்தூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய நான்கு வயது மகள் வர்ஷா.

இவர் இன்று மாலை வீட்டின் வெளியே நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த மர்ம நபர் சிறுமி வர்ஷாவை ஆட்டோவில் ஏற்றிக் கடத்திச் சென்றுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் உடனே வீட்டிற்கு சென்று அவரது தந்தையிடம் தெரிவித்துள்ளனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த வினோத் தனது மகள் கடத்தப்பட்டது குறித்து சிடலப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலிஸார் உடனே வயர்லெஸ் மூலம் சிறுமி கடத்தப்பட்டது குறித்து போலிஸார்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பின்னர் எம்.ஐ.டி.பகுதியில் ரோந்து பணியிலிருந்த குரோம்பேட்டை போலிஸார் அந்த வழியாகச் சிறுமியைக் கடத்தி வந்த ஆட்டோவை மடக்கிப் பிடித்தனர். பிறகு ஆட்டோவில் இருந்த சிறுமியை மீட்டனர்.

பின்னர், சிறுமியைக் கடத்தியவரிடம் நடத்திய விசாரணையில் குரோம்பேட்டை ராதா நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் சம்சுதீன் என்பது தெரியவந்தது. மேலும் அவரை கைது செய்த போலிஸார் சிறுமியைக் கடத்தியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆட்டோவில் கடத்தப்பட்ட சிறுமியை ஒரு மணிநேரத்தில் மீட்டுப் பெற்றோரிடம் ஒப்படைத்த போலிஸாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Also Read: கண்ணில் மிளகாய் போடி தூவி வழிப்பறி- புது மனைவி முன்னிலையில் கணவருக்கு நேர்ந்த சோகம்: ஆந்திராவில் பரபரப்பு