Tamilnadu

வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறித்த கொள்ளையர்கள்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலிஸ்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் குன்னாங்கல்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் மூதாட்டி சிவகாமி (65). கடந்த 20ம் தேதி மாட்டு தொழுவத்தில் இருக்கும் போது இரண்டு அடையாளம் தெரியாத வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து ஒருவர் வெளியே நின்று கொண்டு மற்றொரு நபர் மாட்டு தொழுவத்தில் உள்ளே சென்று மூதாட்டி சிவகாமியை தாக்கி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்து கொண்டு தப்ப முயன்றனர்.

அப்போது ஓடும் அவசரத்தில் 3 பவுன் நகையை அங்கேயே போட்டு விட்டு 1 பவுன் நகையை பறித்து சென்றுள்ளனர். மேலும் மூதாட்டி சிவகாமியை வாலிபர்கள் தாக்கியதால் சிகிச்சைக்காக திருப்பூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சிவகாமியின் மகன் அளித்த புகாரின் அடிப்படையில் பல்லடம் போலிஸார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது இந்த சம்பவத்தில் ஈடுபட்டது வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலிஸார் விசாரணையை தீவிர படுத்தினர்.இதில் நகை பறிப்பில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்கள் திருப்பூரை அடுத்த பல்லக்காட்டு புதூரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து அங்கு சென்ற பல்லடம் போலீசார் பதுங்கி இருந்த இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் அவர்கள் இருவரும் ஒடிசாவை சேர்ந்த பிஸ்வாஜ் தாஸ், மதுசூதன் மொஹந்தி என்பது தெரிய வந்தது. அதனை அடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலிஸார் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: 100 கோடி..கட்சியில் பதவி..4 MLA-களிடம் பேரம் பேசிய கும்பல் சுற்றிவளைத்து கைது! தெலுங்கானா போலிஸ் அதிரடி!