Tamilnadu

”தமிழகத்தில் பயங்கரவாத சம்பவங்கள் நடக்க தமிழக முதல்வர் அனுமதிக்கமாட்டார்” -அமைச்சர் தங்கம் தென்னரசு !

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே நின்றுகொண்டிருந்த மாருதி கார் ஒன்று கடந்த 4 நாட்களுக்கு முன்பு அதிகாலை சுமார் 4 மணியளவில் திடீரென பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறியது. இதையடுத்து இந்த வெடி விபத்து நிகழ்வு குறித்து காவல்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது இதில்தொடர்பு இருப்பதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு, அவர்களை அடுத்த மாதம் 8-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இதனை என்.ஐ.ஏ விசாரிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்தார்.இதனையடுத்து தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்று என்.ஐ.ஏ விசாரணைக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டு, என்.ஐ.ஏ விசாரணையை கையில் எடுத்துள்ளது.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”மாநில காவல்துறை ஒன்றிய அரசின் உளவு அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் யாரும் இந்த அளவு ஒத்துழைப்பு கொடுத்தது கிடையாது என்று என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது. காவல்துறையுடன் இணைந்தே என்ஐஏ விசாரணை நடத்தியுள்ளனர்” எனக் கூறினார்.

அப்போது ஆளுநரின் கருத்து குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், “இந்த விஷயத்தில் 23ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை தமிழக காவல்துறையும் என்.ஐ.ஏ அமைப்பும் இணைந்தே விசாரணை நடத்தியுள்ளது. ஆதாரங்கள் அளிக்கப்பட்டுள்ளதாக கவர்னர் பேசியது குறித்து நாம் கேட்டதற்கு தேசிய புலனாய்வு முகமையுடன் இணைந்து ஆரம்பத்தில் இருந்தே தமிழக காவல்துறை பணியாற்றியுள்ளதுகவர்னர் தெரிவித்திருந்த கருத்திற்கு இந்த விளக்கம் போதுமானதாக இருக்கும். கவர்னர் தெரிவித்ததற்கான காரணத்தை அவரிடத்தில் தான் கேட்க வேண்டும்

தமிழகத்தில் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாத சம்பவங்களை தமிழக முதல்வர் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். இது போன்ற சம்பவங்கள் எந்த ரூபத்தில் வந்தாலும் அதனை தடுத்து நிறுத்தி விரட்டி அடிக்கும் தைரியமிக்க முதல்வராக நமது முதல்வர் இருக்கிறார்.” எனக் கூறினார்.

Also Read: காதலி வீட்டில் கொடுத்த ஜூஸ்.. உள்ளுறுப்புகள் சேதமாகி உயிரிழந்த இளைஞர்.. கேரளத்தை உலுக்கிய படுகொலை !