Tamilnadu

பறந்துசென்ற கோழி.. பிடிக்கமுயன்று பள்ளத்தில் விழுந்து முதியவர் பலி.. மூடநம்பிக்கையால் நேர்ந்த சோகம் !

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று புதிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை கட்டியுள்ளது. அதற்கான திறப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், புதிய கட்டிடத்திற்கு கண் திருஷ்டி கழிக்க வேண்டும் என உரிமையாளர் முடிவெடுத்துள்ளார்.

அதற்காக அப்பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(வயது-70) என்ற முதியவரிடம் திருஷ்டி கழிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ராஜேந்திரன் திருஷ்டி கழிப்பதற்காக ஊதுபத்தி, சூடம், பூசணிக்காய், உயிருள்ள கோழி ஆகியவற்றை வாங்கிக் கொண்டு அந்த புதிய கட்டிடத்துக்கு சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமான அவர் வைத்திருந்த கோழி பறந்துசென்றுள்ளது. அதைத் தொடர்ந்து அதனை பிடிக்க கோழியின் பின்னால் ராஜேந்திரன் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டிடத்தில் லிப்ட் அமைப்பதற்காக தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தில் ராஜேந்திரன் தவறி விழுந்துள்ளார்.

இதில் தலையில் அடிபட்ட அவர் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைக் கண்ட அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இதுகுறித்து சங்கர்நகர் போலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் சடலத்தை பிரேதபரிசோதனைக்காக அனுப்பிவைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Also Read: "போலி Mr Bean-ஐ அனுப்பியதற்கு பழிவாங்கிவிட்டோம்"-ட்விட்டரில் சண்டை போட்ட பாகிஸ்தான் ஜிம்பாப்பே தலைவர்கள்!