Tamilnadu

“அராஜகம் செய்துதான் பணம் வாங்கணும்னா அதுவும் நடக்கும்” : கமிஷன் கேட்டு மிரட்டிய அதிமுக கவுன்சிலர் கணவர்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த ராஜபாளையத்தில் புதிதாக தனியார் கல்லூரி ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த கல்லூரியை கட்டுவதற்கு தேவையான கமிஷனைக் கொடுத்தால், கல்லூரி கட்ட அனுமதிக்க முடியும் என கல்லூரி நிர்வாகத்திடன் அ.தி.மு.க கவுன்சிலரின் கணவர் மிரட்டிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கந்தரக்கோட்டை அ.தி.மு.க பெண் கவுன்சிலரின் கணவர் துரைராஜ் என்பவர், கல்லூரி நிர்வாக மேலாளர் மாணிக்கவாசகம் என்பவரை தொலைபேசியில் தொடர்ப்புக்கொண்டுள்ளார்.

அப்போது மாணிக்கவாசகத்திடம் பேசிய துரைராஜ், ”நீ காலேஜ் கட்டுனா நாங்க பார்த்துட்டு போகணுமா. இதே பகுதி கவுன்சிலர் என்பதால் தான் உன்னிடம் வந்து கேட்கிறேன். இல்லையென்றால் உன்னிடம் எனக்கு என்ன வேலை.

நீ யாருக்கிட்ட வேணா சொல்லு எனக்கு பயமில்லை. எல்லாருக்கும் பணம் கொடுக்குற, எனக்கு எங்க?. சாதாரண இடிபாடு உள்ள வேலைக்கே கமிஷன் வருது. நாங்க அராஜகம் செய்றதுக்கு எவ்வளவு நேரம் ஆகும். அராஜகம் செய்துதான் பணம் வாங்கணும்னா அதுவும் நடக்கும். அதனாலதான் இன்னைக்கு வேலைய நிறுத்துனோம் என பேசியுள்ளார்.

அதிமுக பெண் கவுன்சிலரின் கணவர் மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read: “பழனிசாமி செய்த துரோகங்கள் அவரை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும்..” : சட்டப்பேரவையில் விளாசிய முதல்வர்!