Tamilnadu

"அகம்பாவங்களை விட்டொழிக்க வேண்டும்".. தம்பதி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து!

அகம்பாவத்தைக் காலணிகளைப் போல வீட்டுக்கு வெளியே விட்டுச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் தம்பதியின் வாழ்க்கை மட்டுமல்லாமல் குழந்தைகளின் வாழ்க்கையும் பாதிக்கப்படும் என வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தனது நான்கு வயதுக் குழந்தையைக் கடத்திச் சென்று, கணவர் சட்டவிரோதமாகக் காவலில் வைத்திருப்பதால், குழந்தையை மீட்டுத்தர உத்தரவிட வேண்டும் எனக் கோரி பெண் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடந்த 2020ம் ஆண்டு முதல் தந்தையிடம் குழந்தை வளர்ந்து வரும் நிலையில் அதைச் சட்டவிரோத காவலில் இருப்பதாகக் கருத முடியாது எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், அகம்பாவமும், அன்பும் ஒரு சேர பயணிக்க முடியாது. அகம்பாவம் உறவைக் கெடுத்து விடும். அகம்பாவம், சகிப்புத் தன்மையின்மையைக் காலணிகளைப் போல் வீட்டுக்கு வெளியில் விட்டுச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் தம்பதியருக்கு மட்டுமல்லாமல், குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும்.

மனைவி என்பவர் குடும்பத்தின் ஆணிவேர் போன்றவர். கணவர் அடிமரம். மற்ற உறுப்பினர்கள் கிளைகள். வேர் சேதமடைந்து விட்டால் மொத்த குடும்பமும் பாதிப்படையும். கணவன் - மனைவி தங்கள் குழந்தைகளின் நலனைக் கருதி அகம்பாவங்களை விட்டொழிக்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Also Read: “ஆவின் இனிப்பு வகைகள் குறித்து ‘தினமலர்’ வெளியிட்ட செய்தி உண்மைக்கு புறம்பானது” : ஆவின் நிர்வாகம் பதிலடி!