Tamilnadu

“மாணவர்களுக்கு விஷ கருத்தை போதிக்கிறார் ஆளுநர் RN.ரவி” : வெளுத்து வாங்கிய KS.அழகிரி!

திருவாரூர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய கே.எஸ்.அழகிரி, “தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தினமும் செய்தியில் வரவேண்டும் என்பதற்காக ஏதாவது ஒன்றை சொல்லி வருகிறார். அதுவும் குறிப்பாக தமிழர்கள் ஏற்றுக் கொள்ளாத அல்லது தமிழ் உணர்வுகளுக்கு எதிரான செய்திகளை சொல்வதில் மிகவும் பயிற்சி பெற்றிருக்கிறார்.

நேற்று அவர் மாணவர்களுடைய உரையாற்றுகிறபோது இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஒன்றிணைத்தார்கள் என சொல்லுவது தவறானது. அவர்களுக்கு முன்பே இந்தியா ஒன்றிணைந்து இருந்தது என்று சொல்லி இருக்கிறார். தென்னிந்தியா முழுவதும் திராவிடமாக இருந்தது. இன்றைக்கு அதை தமிழ் என்று குறுக்கிவிட்டார்கள் என்று சொல்லுகிறார்.

இவர் என்ன திராவிடம் தோல்வியடைந்து விட்டது என்று சொல்லுகிறாரா அல்லது தமிழை வேண்டும் என்றே சிதைத்து விட்டார்கள் என்று சொல்கிறாரா என்று எங்களுக்கு புரியவில்லை. ஆரம்ப காலத்தில் ஆரியம், திராவிடம் என்கின்ற ஒரு தத்துவம் இருந்தது. ஆனால், இன்றைக்கு சொல்லுகிற தமிழ் தான் நிலையானது நிரந்தரமான எப்போதும் தமிழகத்தில் தமிழ் இருந்திருக்கிறது.

ஆளுநர் வரலாற்றை புரட்டிப் பார்க்க விரும்புகிறார். வரலாற்றை அவர் மாற்றி எழுத நினைக்கிறார். எனவே அதிகாரப்பூர்வமாக மாளிகையில் அமர்ந்து கொண்டு மாணவர்களுக்கு விஷ கருத்தை போதிக்கிறார். இது மிகவும் தவறானது. தமிழ் கலாச்சாரம் ஏற்றுக் கொள்ளாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்

Also Read: “பா.ஜ.க-வின் ஏஜென்ட்டாக செயல்படும் ஆளுநர் RN.ரவி.. உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும்” : துரை வைகோ ஆவேசம்!