Tamilnadu

ஆன்மிகத்தை உயர்வு தாழ்வு கற்பிக்க மட்டுமே பயன்படுத்தும் நபர்களுக்குத்தான் திமுக அரசு எதிரி: முதலமைச்சர்!

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அருள்மிகு கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் வள்ளளார் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு "வள்ளலார்-200" இலச்சினை, தபால் உறை மற்றும் சிறப்பு மலர், ஆகியவற்றை வெளியிட்டார்.

பின்னர் சிறப்பு சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், " சிலருக்கு இது ஆச்சர்யமாக இருக்கலாம். சிலருக்கு இது அதிர்ச்சியாகக் கூட இருக்கலாம். என்னைப் பொறுத்தவரையில் சிலர் சொல்லி வரும் அவதூறுகளுக்கான பதில் தான் இந்த விழா.

திராவிட மாடல் ஆட்சியானது ஆன்மிகத்துக்கு எதிரானது, மக்களின் நம்பிக்கைகளுக்கு எதிரானது என்று மதத்தை வைத்து பிழைக்கும் சிலர் நாட்டில் பேசி வருகிறார்கள். ஆன்மிகத்துக்கு எதிரானது அல்ல, திமுக ஆட்சி.

ஆன்மிகத்தை அரசியலுக்கும், தங்களது சொந்த சுயநலத்துக்கும், உயர்வு தாழ்வு கற்பிப்பதற்கும் மட்டுமே பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு எதிரானது தான் இந்த ஆட்சி. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திராவிடத்தின் மூலத் தத்துவத்தை முதலில் சொன்னவர் அய்யன் வள்ளுவர்.

சாதியும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்தியவர் அருட்பெருஞ்சோதி இராமலிங்க வள்ளலார். சாதி மதம் சமயமெனும் சங்கடம்விட்டு அறியேன் சாத்திரச் சோறாடுகின்ற சஞ்சலம்விட்டு அறியேன் - எனப் பாடியவர் அவர்.

கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடிப் போகக் கடைசி வரை பாடியவர் அவர். சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தேன் சாத்திரக் குப்பையும் தணந்தேன் - என்று முடிவுக்கு வந்தவர் அவர். சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச் சண்டையிலே ஆதியிலே அபிமானத்து அலைகின்ற உலகீர்

அலைந் தலைந்து வீணேநீர் அழிதல் அழகலவே - என்று பாடியவர் வள்ளலார் பெருமான். இத்தகைய வள்ளலார் அவர்களைப் போற்றுவது திராவிட ஆட்சியின் கடமை ஆறாம் திருமுறை பாடல்களைத் தொகுத்து, 'இராமலிங்கர் பாடல் திரட்டு' என்ற நூலை 1940 ஆம் ஆண்டுகளிலேயே வெளியிட்டவர் தந்தை பெரியார் அவர்கள்.

வள்ளலார் நகரை உருவாக்கியவர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள். ஆட்சிக்கு வந்ததும் வள்ளலார் பிறந்த நாளை தனிப்பெரும் கருணை நாளாக அறிவித்துக் கொண்டாடி வருகிறோம். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 419 ஆவது வாக்குறுதியாக 'வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம்' அமைக்கப்படும் என்று சொல்லி இருக்கிறோம். ''சாதி சமய நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் அருட்பிரகாச வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்கப் போதனைகளைப் போற்றும் வகையில் இது அமையும்'' என்று சொல்லப்பட்டு உள்ளது.

அதனை எப்படி அமைப்பது என்பது குறித்து வல்லுநர் குழு ஆலோசனை பெறப்பட்டுள்ளது. அமைச்சர் சேகர்பாபு அந்த இடத்தை பார்வையிட்டுள்ளார். விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும்." என தெரிவித்துள்ளார்.

Also Read: “அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி” - சிறந்த சிந்தனையாளர்களின் பட்டியலில் முதல்வர் கட்டுரை: Hindustan Times!