Tamilnadu

“நீங்க அதிக ஆபாச படம் பாத்திருக்கீங்க..” : ஃபோனில் மிரட்டி நகைகடை ஊழியரிடம் பணம் பறித்த மர்ம கும்பல்!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த பேரிகையை சேர்ந்தவர் சந்திரகுமார் இவர் ஓசூரில் உள்ள ஒரு நகைகடையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சந்திரகுமார் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர்கள் சென்னை சைபர் கிரைம் போலிஸ் அலுவலகத்திலிருந்து பேசுவதாகவும் நீங்கள் குழந்தைகளின் ஆபாச படங்களை சமீப நாட்களாக பார்த்து வருவது குறித்து எங்களுக்கு புகார் வந்துள்ளது.

உங்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த வழக்கில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்றால் 10 ஆயிரம் ரூபாய் உடனடியாக அனுப்ப வேண்டும் எனக்கூறி மிரட்டி உள்ளனர். அதை நம்பிய சந்திரகுமார் ‘போன் பே’ மூலம் மூன்று தவணைகளாக அவர்களது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பியுள்ளார். அதன் பின்னர் அந்த மொபைல் எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை.

சந்தேகமடைந்த சந்திரகுமார் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலிஸில் புகார் அளித்தார். சைபர் கிரைம் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் அந்த விசாரணையில் மர்ம நபர்கள் பேசிய மொபைல் எண்ணின் முகவரி போலி என்பதும், பாலக்கோடு அருகில் சிம்கார்டு வாங்கப்பட்டதும் தெரிந்தது.

பணம் எடுத்த வங்கி விவரத்தை போலிஸார் விசாரித்தபோது பணம் பெற்றவர் சேலம் மாவட்டம், கரடூர் கிராமத்தைச் சேர்ந்த மணிமுத்து என்பதும் அவரது நண்பர்கள் மூன்றுபேர் இணைந்து பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. யூடியூப்பில் போலிஸ் வாக்கி டாக்கி சத்தத்தை வைத்துவிட்டு அதன் பின்னர் மொபைலில் பேசி பணப்பறிப்பில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதுபோல பலரிடம் மிரட்டி பணம் பறிக்க முயன்றதும் தெரிந்துள்ளது.

இதையடுத்து சந்திரகுமாரிடம் சைபர் கிரைம் போலீசார் போல் மிரட்டி பணம் பறித்த தர்மபுரி மாவட்டம், சுங்கரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த மால்வின், மணிமுத்து, காரிமங்கலத்தைச் சேர்ந்த மாரியப்பன், கிருஷ்ணகிரி மாவட்டம், சாப்பர்த்தி கிராமத்தைச் சேர்ந்த வேடியப்பன் உள்ளிட்ட நான்கு பேரையும் போலிஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, மூன்று செல் போன், வங்கி கணக்கு புத்தகம், டெபிட்கார்டுகள், 4 சிம்கார்டுகள் மற்றும் 6 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்தனர். இதுபோல் யார், யாரிடம் மிரட்டி பணம் பெற்றார்கள் என்ற விவரங்களையும் போலிஸார் விசாரித்து வருகின்றனர்.

Also Read: “செல்போனுக்கு வந்த SMS; சின்ன கல், பெத்த லாபம்” - ரூ.14 லட்சத்தை அபேஸ் செய்த மோசடி கும்பல்: நடந்தது என்ன?