Tamilnadu

4 வயது மகளை மீட்க கைக்குழந்தையோடு ஆற்றில் குதித்த தாய்.. நீரில் மூழ்கிய குழந்தைகளுக்கு நேர்ந்த துயரம் !

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் - மாரியம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு மாதுரி தேவி (வயது 4) மற்றும் நிரஞ்சனி (வயதி 7) என்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நெல்லை டவுன் ஜவுளிக்கடை ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வரும் கண்ணன், தனது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் என கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை மாரியம்மாள் தனது இரு குழந்தைகளை ஆட்டோவில் கூட்டிக்கொண்டு சுத்தமல்லி அணைக்கட்டினை பார்க்க சென்றுள்ளார். அப்போது 4 வயதுடைய சிறுமி அங்கிருந்த அணைக்கட்டு பகுதியில் ஆற்றினை பார்த்தவாறு சென்றபோது நிலை தடுமாறி தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதனை கண்ட தாய் மாரியம்மாள், உடனே மகளை காப்பாற்ற தனது கைக்குழந்தையோடு ஆற்றில் இறங்கியுள்ளார். அப்போது நீரில் மூழ்கி மூச்சு திணறி கைகுழந்தையும் பரிதாபமாக பலியானது. இதையடுத்து இதுகுறித்து பேட்டை, சேரன்மகாதேவி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து விரைந்து வந்த அவர்கள் சிறுமியை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

நீண்ட நேரம் தேடிய பிறகே ஆற்றில் விழுந்த சிறுமி மாதுரிதேவியின் உடல் சுத்தமல்லி அணைக்கட்டு மதகின் அருகே 100 மீட்டர் தொலைவில் இறந்த நிலையில் மீட்கப்பட்டது. பின்னர் மீட்கப்பட்ட உடல்களை உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.