Tamilnadu

இரு சக்கர வாகனத்தின் மீது மோதிய லாரி.. வீடு திரும்பிய இரட்டை சகோதரிகளுக்கு நேர்ந்த கொடூரம்!

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகேயுள்ள பாப்பாக்குடி பகுதியைச் சேர்ந்தவர் ராமர். இவரது மகள்கள் சங்கீதா, வைஷ்ணவி). இரட்டையர்களான இவர்கள் இருவரும் நெல்லை பழைய பேட்டையில் உள்ள ராணி அண்ணா அரசு கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் வீட்டிலிருந்து கல்லூரிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று வருகின்றனர். இந்நிலையில் இன்று இருவரும் தங்களது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, முக்கூடல் அருகேயுள்ள ஆலங்குளம் சாலையிலுள்ள தனியார் மில் அருகே இருசக்கர வாகனம் வந்த போது, எதிரே வந்த லாரி, எதிர்பாராத விதமாக இவர்கள் வாகனத்தின் மீது மோதியுள்ளது .இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி சங்கீதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வைஷ்ணவிக்கும் காயம் ஏற்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் சங்கீதா உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். மேலும் காயமடைந்த வைஷ்ணவியையும் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் . இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் நவநீத கிருஷ்ணனை கைது செய்தனர்.

Also Read: பட்டியல் சமூகத்தை சேர்ந்த மருத்துவர் தொட்ட உடலை வாங்க மறுத்த குடும்பம்.. ஒடிசாவில் நடந்த தீண்டாமை கொடுமை!