Tamilnadu

ஏா்பஸ் A-380 ரக பெரிய விமானங்கள் வந்துச்செல்ல சிறப்பு ஏற்பாடு : உலக தரத்திற்கு உயரும் சென்னை ஏர்போர்ட் !

சென்னை சர்வதேச விமான நிலையம், உள்நாட்டு விமான நிலையம் தற்போது 1,350 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. விமானங்களின் எண்ணிக்கை, பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே உள்நாடு, சா்வதேச விமான முணையங்களை இணைத்து, ஒருங்கிணைந்த நவீன விமான முனையம் ரூ.2,400 கோடி மதிப்பீட்டில் கட்டும் பணி நடந்து வருகிறது.

சென்னை விமான நிலைய மேம்பாட்டுக்காக, கடந்த ஜூலை மாதம் தமிழக அரசு, பல்லாவரம் மற்றும் பரங்கி மலை பகுதியில், 21.24 ஏக்கர் நிலம், விமான நிலைய ஆணையத்திடம் வழங்கப்பட்டது. அதில் 10.20 ஏக்கா் நிலத்தை பயன்படுத்தி, சென்னை விமானநிலைய ஓடுபாதைகளை அபிவிருத்தி செய்யப்படவிருக்கிறது.

சென்னை விமானநிலையத்தில் தற்போது 2 ஓடுபாதைகள் உள்ளன. முதல் ஓடுபாதை 3,658 மீட்டா் நீளம், 45 மீட்டா் அகலமும் உள்ளது. இரண்டாவது ஓடுபாதை 2,890 மீட்டா் நீளம்,45 மீட்டா் அகலம் உடையது. இதில் முதல் ஓடுபாதையின் நீளத்தை மேலும் 400 மீட்டா் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதனால் முதல் ஓடுபாதை 4,058 மீட்டா் (4.058 கிமீ) உடையதாக மாறும். மேலும் பரங்கிமலை பகுதியில், விமானங்கள் ஓடுபாதையில் தரையிறங்கும் போது, விமானிகளுக்கு உதவும் வகையில், கூடுதல் ஒளி அமைப்புவசதிகள், நவீன கருவிகள் ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், விமானங்கள் தரை இறங்குவதில் சிரமங்கள் இருக்காது.

அதோடு முக்கியமாக பெரிய ரக விமானமான, ஏா் பஸ் A-380 ரகம் விமானங்கள், இதுவரை சென்னை விமானநிலையத்தில் வந்து தரையிறங்கவில்லை. அந்த விமானம் மூன்று அடுக்குகளுடன் 746 இருக்கைகள் உடையது. இந்தியாவில் டெல்லி, மும்பை, பெங்களூா் ஆகிய விமானநிலையங்களில் மட்டுமே, அந்த விமானங்கள் வந்து தரையிறங்கும் வசதி உள்ளது.

சென்னை விமானநிலையத்தில் ஓடுபாதைகளின் நீளம் குறைவாக இருப்பதால், அதைப்போன்ற பெரிய ரக விமானங்கள் வந்து தரையிறங்குவதில் சிரமங்கள் உள்ளன. ஆனால் தற்போது சென்னை விமானநிலையத்தில் ஓடுபாதை நீளம் அதிகரிக்கப்படுவதால், ஏா்பஸ் A-380 ரக பெரிய விமானங்கள் வந்து தரையிறங்கி, புறப்பட்டு செல்ல முடியும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனா்.

Also Read: சென்னை விமான நிலைய வளாகத்தில் வேன் டிரைவா் தூக்கிட்டு தற்கொலை.. போலிஸ் விசாரணையில் ‘பகீர்’ தகவல்!