Tamilnadu
"4 அல்ல.. எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே": பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (19.9.2022) மறைமலைநகரில் நடைபெற்ற தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் நான்காவது தமிழ் மாநில மாநாட்டில் ஆற்றிய உரை:-
தங்கள் கையில் அதிகாரம் இருந்தபோது நாட்டைப் பற்றியோ, நாட்டு மக்களைப் பற்றியோ கவலைப்படாதவர்கள், சொன்னார்களே, 10 ஆண்டு காலம் எப்படி இருந்தது என்று அந்த கொடுமைகளை சுட்டிக்காட்டினார்களே! இன்றைக்கு இந்த ஆட்சியின் மீது இட்டுக் கட்டிய கதைகள் எல்லாம் அவதூறாக பரப்ப நினைக்கிறார்கள். ஆக, இப்போது போடுகிற ஆர்ப்பாட்ட கோஷங்கள், இது எல்லாம் மக்களுக்குத் தெரியாதா? மக்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்களா?
நான் தொடக்கத்தில் சொன்னது போல, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, ஆளும்கட்சியாக இருந்தபோதும் சரி, நாங்கள் எப்போதும் உங்களுடன் இருக்கக்கூடியவர்கள். அதிகாரத்துக்கு வந்துவிட்ட காரணத்தால் விலகிச் செல்வபவர்கள் அல்ல நாங்கள். உங்கள் கோரிக்கையைச் செயல்படுத்துவதற்காகத்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறோம்!
இங்கே கூட நம்முடைய மதிப்பிற்குரிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் பாலகிருஷ்ணன் அவர்கள் இருக்கிறார். கூட்டணிக் கட்சியாக இருந்தாலும், அவ்வப்போது எங்களுக்கு ஆலோசனைகளைச் சொல்லி வருபவர்தான் அவர். ஆகவே, சொல்லக்கூடிய அந்தக் கோரிக்கைகளின் நியாயத்தை அறிந்து, புரிந்து அதனை எந்த அளவுக்கு நாங்கள் செயல்படுத்தி வருகிறோம் என்பது அவருக்கும் தெரியும், உங்களுக்கும் புரியும். இப்படி அனைத்து மக்களுடைய அரசாக ஒரு நல்லாட்சியை திராவிட முன்னேற்றக் கழக அரசு நடத்தி வருகிறது.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் ஏதோ நான்கு முதலமைச்சர்கள் இருக்கிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள் ஒரு புதிதாக ஒன்று கண்டுபிடித்து பேசிக் கொண்டிருக்கிறார். நான்கு முதலமைச்சர்கள் அல்ல - யாரெல்லாம் நல்ல ஆலோசனைகளை எங்களுக்கு வழங்குகிறார்களோ, அந்த ஆலோசனைகள் எல்லாம் செயல்வடிவம் பெறுகிறதோ, அவர்கள் அனைவரும் சேர்ந்து தான் இந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி.
எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் சொன்னாரே அந்த ஆட்சிதான் நடக்கிறது!இது ஒரு கட்சியின் ஆட்சியாக நீங்கள் கருதவேண்டிய அவசியம் இல்லை. இனத்தினுடைய ஆட்சி என்று அதனால்தான் நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். ஆனால் இன்றைக்கு சொந்தப் புத்தியும் இல்லை, சொல் புத்தியும் இல்லாமல், கடந்த கால அ.தி.மு.க அரசு இருந்ததே அதைப் போன்ற ஆட்சி அல்ல இந்த ஆட்சி.
இந்த ஆட்சியை வழிநடத்துவது திராவிட மாடல் என்ற பெரும் தத்துவம்! இத்தகைய திராவிட மாடல் ஆட்சி அனைவருக்கும் நன்மை செய்யும் ஆட்சியாக அனைவரும் விரும்பக்கூடிய ஆட்சியாக அனைவரின் ஆட்சியாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Also Read
-
முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற வருண், வாஷிங்டன் சுந்தர்… கையில் கொடுத்த ஆச்சரியப் பரிசு: முழு விவரம்!
-
மீண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய ஓய்வறியாமல் உழைப்போம்: செல்வப்பெருந்தகை அழைப்பு!
-
‘நாம் தான் வெல்வோம்’ என்ற எண்ணத்தை எதிரிகளிடமும் ஏற்படுத்தியுள்ளோம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (மார்ச் 17) முதல் ‘தி.மு.க வேட்பாளர்கள் நேர்காணல்’! : முழு விவரம் உள்ளே!
-
“கழக அரசு மீது களங்கம் ஏற்படுத்த நினைத்தால் அதனைப் பெண்களே ஏற்க மாட்டார்கள்!” : முரசொலி தலையங்கம்!