Tamilnadu
“தமிழ்நாட்டில் முதன்முறையாக; இலங்கை தமிழர்களுக்கு தனித்தனி நிரந்தர வீடுகள்”: சொன்னதை செய்த திராவிட அரசு!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (14.9.2022) முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, திண்டுக்கல் மாவட்டம், தோட்டனூத்து ஊராட்சியில், தோட்டனூத்து, அடியனூத்து மற்றும் கோபால்பட்டி முகாம்களை ஒருங்கிணைத்து 17 கோடியே 84 இலட்சத்து 48 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 321 புதிய வீடுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை திறந்து வைத்தார்.
“கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது என்றால், கடல் கடந்து வாழும் தமிழர்களின் கண்ணீரால்" என்று எழுதினார் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள். அத்தகைய பேரறிஞர் அண்ணா அவர்களுடைய வழி நடக்கக்கூடிய இந்த அரசின் சார்பில், கடல் கடந்து வந்த இலங்கைத் தமிழ் மக்களின் கண்ணீரைத் துடைக்கக்கூடிய வகையில், முதலமைச்சர் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்கள் நலன் காக்க 27.8.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் விதி 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில், “கடந்த சில ஆண்டுகளாக முறையான அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்துவரக்கூடிய முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு, பாதுகாப்பான, கௌரவமான, மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை அமைத்துத் தருவதை இந்த அரசு உறுதிசெய்யும் என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
இதற்காக, அவர்கள் தங்கியிருக்கும் முகாம்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அந்த ஆய்வுகளின் அடிப்படையில், இலங்கைத் தமிழர்களது முகாம்களில், மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகள் புதிதாகக் கட்டித்தரப்படும்” என்று அறிவித்தார்.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டத்தில் உள்ள தோட்டனூத்து, அடியனூத்து மற்றும் கோபால்பட்டி முகாம்களை ஒருங்கிணைத்து 321 புதிய வீடுகளுடன் கூடிய புதிய முகாமினை அமைக்க ஏதுவாக தோட்டனூத்து கிராமத்தில் 3.05 ஹெக்டேர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான நிதியும் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, தோட்டனூத்து ஊராட்சியில் புதிதாக ஒருங்கிணைந்த இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாம் அமைக்கப்பட்டு 15 கோடியே 88 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் செலவில் ஒவ்வொரு குடியிருப்பும் தலா 300 சதுரஅடி பரப்பளவில் 321 வீடுகள் கட்டப்பட்டுள்ளது.
மேலும், இம்முகாமில் 1 கோடியே 62 இலட்சத்து 43 ஆயிரம் ரூபாய் செலவில் அங்கன்வாடி மையம், தார்சாலை, சிமெண்ட் சாலை, ஆழ்குழாய், மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி, புதிய மின் கம்பங்கள், 78 தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், 33 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான குளியலறைகள் மற்றும் புதிய ஆழ்குழாய் கிணறு ஆகியன அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம், தோட்டனுாத்து ஊராட்சியில் ”ஒருங்கிணைந்த இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாம்” தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் 321 வீடுகள் மற்றும் இதர அடிப்படை வசதிப் பணிகள் எட்டு மாதங்களில் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
"பும்ரா, ரஷித்கான் போன்ற பௌலர்கள் எல்லா அணிகளிலும் இல்லை" - Impact Player விதிமுறைக்கு கோலி எதிர்ப்பு !
-
“இரண்டு கதாபாத்திரமும் ஒன்றுதான்” : மோடியை மறைமுகமாக விமர்சித்த சுப்ரியா ஸ்ரீனேட் !
-
சாலையில் நடந்து சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை : உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
-
வாக்குப்பதிவு சதவீதத்தில் தொடர் குளறுபடி - திடீரென்று உயர்ந்த 1 கோடி வாக்குகள்: மோடி அரசு செய்த சதி என்ன?
-
”பா.ஜ.கவின் இந்துத்வா கொள்கை வீட்டையே தீ வைத்து எரித்து விடும்” : உத்தவ் தாக்கரே கடும் சாடல்!