Tamilnadu

“மருத்துவமனை அனுமதி வழங்கியதில் முறைகேடு” - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் தொடரும் IT ரெய்டு!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவருக்கு நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தொழில் பங்குதாரர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று லஞ்ச ஒழிப்பு போலிஸார் சோதனை நடத்தினர்.

முன்னதாக கடந்த 2016அம் ஆண்டு ஏப்ரல் முதல் இந்தாண்டு மார்ச் வரை கடந்த 5 ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக சுமார் 27 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விஜயபாஸ்கர் தன் மனைவி ரம்யா, மகள்கள் பெயரில் சொத்துகள் வாங்கிக் குவித்ததாகவும், லஞ்ச பணத்தின் மூலம் அறக்கட்டளை தொடங்கி கல்வி நிறுவனங்களையும் நடத்தி வந்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரியவந்தது. இதில் சுமார் 14 கல்வி நிறுவனங்கள் நடத்தி பணம் சம்பாதித்தது தெரியவந்தது.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனுமதி வழங்கியதில் பல்வேறு முறைகேடு நடந்ததாக இன்று காலை 6 மணி முதல் 6 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி, சேலம், தேனி, மதுரை மற்றும் சென்னை பல்லாவரம் பகுதியில் சோதனை நடைபெற்று வருகிறது. இதில், பல்லாவரம் வேல்ஸ் கல்லூரியில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் டி.எஸ்.பி ஜாய் தயாள் தலைமையில் சோதனை செய்து வருகின்றனர்.

அதேபோல், சேலம் அரசு மோகன் குமார் மங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவரான சேலம் சீரங்கபாளையம் பகுதியில் வசித்து வரும் மனோகர் என்பவரது வீட்டிலும், சேலம் பழனியப்பா நகர் பகுதியில் வசித்து வரும் அரசு மருத்துவர் சுஜாதா என்பவரது வீட்டிலும், இதேபோன்று சேலம் சுப்பிரமணி நகர் பகுதியில் வசித்து வரும் அரசு மருத்துவர் வசந்தகுமார் என்பவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து மூன்று அரசு மருத்துவர்கள் இல்லங்களிலும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதுமட்டுமல்லாது, விஜயபாஸ்கரின் நண்பரான தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜி நாதனின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் தற்போது தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Also Read: எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான 26 இடங்களில் ரெய்டு - கைது நடவடிக்கைக்குத் தயாராகும் லஞ்ச ஒழிப்புத்துறை?