Tamilnadu

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.22 லட்சம் மோசடி.. கட்சியின் நிர்வாகியிடமே கைவரிசை காட்டிய அதிமுக முன்னாள் MLA

பெரம்பலூர் அடுத்துள்ள கவுள் பாளையம் கிராமத்தில் வசித்து வரும் செல்வகுமார் (42), இவர் அ.தி.மு.க. கட்சியில் பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் பதவி வகித்து வருகிறார். இவர் முன்னாள் கவுல் பாளையம் ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்துள்ளார். இவர் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன் இடம் புகார் அளித்தார்.

அதில், "தனது மனைவி மகேஸ்வரி தமிழ் துறையில் முனைவர் பட்டம் பெற்று தற்சமயம் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு அதிமுக ஆட்சியில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இளம்பை இரா. தமிழ்ச்செல்வன்.

இவர் என்னிடம் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையில் உதவி இயக்குனர் பணிக்கு நேரடி நியமனத்தின் மூலம் பணி நியமனம் செய்ய இருக்கிறார்கள் உங்கள் மனைவிக்கு அதனை பெற்றுத் தருகிறேன் எனக்கூறி, இரண்டு தவணையாக கடந்த 24-03-2020 அன்று ரூ.12 லட்சமும், 28,03,2020 அன்று ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் என மொத்தம் 22 லட்சத்து 50 ஆயிரம் பணத்தைப் பெற்றுக் கொண்டவர்.

எந்த பணி நியமனமும் இதுவரை வழங்கவில்லை. இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் நான் பலமுறை தொலைபேசி மூலமாகவும் நேரிலும் சென்று பணத்தை மீண்டும் கொடுக்குமாறு கேட்டேன் அவர் தருகிறேன் என சொல்லி காலம் தாழ்த்தி வந்தார். கடந்த 18.5.2022 அன்று அவரை எளம்பலூர் சாலையில் அவர் கட்டி வரும் புது இல்லத்தில் சென்று கேட்டேன் ஆனால் அவர் பணம் தர முடியாது உன்னால் ஆனதை பார்த்துக்கொள் என கூறி தகராறு செய்தார்.

மேலும், அருகில் இருந்த இரும்பு கம்பியை கொண்டு உன்னை கொன்று விடுவேன் பார் என கூறி என்னை நோக்கி அடிக்க பாய்ந்தார், அதனால் சூழ்நிலை கருதி நான் வெளியேறி விட்டேன். மீண்டும், பலமுறை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்ட போது அதே மிரட்டல் தான் விடுத்து வருகிறார். எனவே அவரிடம் இருந்து எனது பணத்தை மீட்டுக் கொடுக்கவும் என்னை கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Also Read: மூளைச்சாவு அடைந்த நபர்.. "உறுப்பு தானத்துக்கு தயாரானபோது நடந்த medical miracle" :அமெரிக்காவில் ஆச்சர்யம்!