Tamilnadu
ஆண்களுக்கு நிகராக பெண்களும் படிக்கலாம் என்ற நிலையை உருவாக்கியது திராவிட இயக்கம்தான்: முதல்வர் பெருமிதம்!
சென்னை ராயபுரத்தில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "புதுமைப்பெண்" திட்டத்தை தொடங்கி வைத்தார். அதேபோல் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரி பள்ளிகள் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், "புதுமைப்பெண்" திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது வருமாறு:- தமிழ்நாடு அரசின் மிக முக்கியமான முத்தான திட்டங்களின் தொடக்கவிழா இன்று நடக்கிறது. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர் கல்வித் திட்டம் இன்று தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர் கல்விச் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகத்தான திட்டம் இது.
உயர்ஜாதியைச் சேர்ந்த பணக்காரர்கள் மட்டுமே படிக்க முடியும். அதுவும் ஆண்கள் மட்டும் தான் படிக்க முடியும் என்று இருந்தது. அத்தகைய காலத்தில் இடஒதுக்கீட்டை உருவாக்கி - பள்ளிகளையும் உருவாக்கியது நீதிக்கட்சி. ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் படிக்கலாம் என்ற நிலையை திராவிட இயக்கம் உருவாக்கியது.
அந்த சமூகநீதியை அரசியல் ரீதியாகக் காப்பாற்றியவர் தந்தை பெரியார் அவர்கள். ஆட்சி ரீதியாகக் காத்தவர் பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் ஆவார்கள். அவர்களது வழித்தடத்தில் நமது திராவிட மாடல் அரசு அமைந்துள்ளது. இன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான பெண்கள் - இக்கல்லூரியில் படிக்கிறீர்கள் என்றால் அது திராவிட இயக்கத்தின் பெண்ணுரிமைப் போராட்டங்களால் கிடைத்தது ஆகும். அந்த வரிசையில் கல்வி - சமூகநீதி - பெண்ணுரிமைத் திட்டங்களை அதிகளவில் செயல்படுத்தி வருகிறோம்.
உயர்கல்வியிலும் - பள்ளிக் கல்வியிலும் - சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையிலும் தமிழக அரசு செயல்படுத்தி வரும் முன்னுரிமைத் திட்டங்களின் மூலமாக தமிழ்ச்சமுதாயத்தின் மேம்பாடு என்பது பெரும் பாய்ச்சலை நிகழ்த்திக் கொண்டு இருக்கிறது.
* இல்லம் தேடி கல்வி
* நான் முதல்வன்
* கல்லூரிக் கனவு
* இன்று தொடங்கப்பட்டுள்ள புதுமைப் பெண் - ஆகிய திட்டங்கள் என்பவை திராவிட மாடல் ஆட்சியின் அடையாளங்களாக அமைந்துள்ளன.
பள்ளியில் படிக்க வரும் மகளிருக்கு கல்லூரிக்கு வருவதற்கு தடங்கலும் தடையும் தயக்கமும் இருக்கிறது. அந்தத் தடையை உடைப்பதற்குத்தான் இந்த புதுமைப் பெண் திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். 'படிக்க வைக்க காசு இல்லையா' என்ற கலக்கம் பெற்றோருக்கு இருக்கக் கூடாது.
இன்றைக்கு மகளிருக்கு இலவச பேருந்து பயண வசதி செய்து தரப்பட்டுள்ளது. இது பெண்களுக்கு பொருளாதாரச் சுதந்திரத்தை வழங்கி இருக்கிறது. மாதம் தோறும் 600 முதல் 1200 வரை செலவு மிச்சம் ஆகிறது என்று பெண்கள் சொல்கிறார்கள்.
இதனால் அரசுக்கு எத்தனை கோடி இழப்பு என்பதை நான் இங்கு பேசவில்லை. இதன் மூலமாக எத்தனை லட்சம் பெண்கள் சிறப்பு அடைகிறார்கள் என்பதே முக்கியம் ஆகும். பெண் திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர் கல்வி உறுதித்திட்டம் என்று இதற்குப் பெயர்.
திராவிட இயக்கத்தின் பெண் சிங்கமாக இருந்தவர் தான் மூவலூர் ராமாமிர்தம் அவர்கள் ஆவார்கள். அடக்கி ஒடுக்கப்பட்ட பெண்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்தவர். படிக்கக் கூடாது என்று தடுக்கப்பட்ட பெண்களுக்காகப் போராடியவர். அந்தக் காலத்தில் மூடநம்பிக்கை காரணமாக முடக்கப்பட்ட பெண்களுக்கு உரிமைக் கதவைத் திறந்துவிட்டவர் அவர்.
100 ஆண்டுகளுக்கு முன்னால் மகத்தான புரட்சியை தந்தை பெரியாருடன் இணைந்து நடத்திக் காட்டியவர் அவர். 1938 ஆம் ஆண்டு தமிழ்காக்கும் போராட்டத்துக்காக திருச்சி முதல் சென்னை வரை நடந்த பேரணியில் நடந்து வந்தவர் அவர். திராவிட இயக்கத்தின் தீரர்களுக்கு விருதுகள் தரவேண்டும் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் முடிவெடுத்து - அதனை முதன்முதலாக வழங்கியது மூவலூர் அம்மையாருக்குத்தான். அத்தகைய பெருமைமிகு அம்மையார் பெயரால் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை நான் எப்படி - எந்த நோக்கத்துக்காக உருவாக வேண்டும் என்று சிந்தித்தேனோ அதே நோக்கத்துடன் - சிறப்பாகச் செய்து காட்டிய அமைச்சர் கீதா ஜீவன் அவர்களை நான் பாராட்டுகிறேன்.
அவரையே தூத்துக்குடியில் நடந்த விழாவில் பெண் சிங்கம் என்று பாராட்டி இருக்கிறேன்.பெண்களின் வளர்ச்சிக்காக தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டு அவர் செயல்பட்டு வருகிறார். ஆயிரம் ரூபாய் வழங்குவது என்பதை அந்த மாணவியர்க்கு இலவசம் வழங்குவதாக அரசு கருதவில்லை. அப்படி வழங்குவதை கடமையாக அரசு நினைக்கிறது.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Also Read
-
வாக்குப்பதிவு சதவீதத்தில் திடீரென அசாதாரணமான 6 % மாறுபாடு ஏற்பட்டது ஏன்? - சீதாராம் யெச்சூரி கேள்வி !
-
பா.ஜ.க.வினரால் அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள் : கண்டுகொள்ளாத ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
நிலவின் துருவங்களில் உறைந்திருக்கும் தண்ணீர் : இஸ்ரோவின் ஆய்வில் கிடைத்த உலகை அதிரவைத்த தகவல் !
-
ஜனநாயகத்தன்மையை இழக்கும் இந்தியா : RSF வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
-
உலகப் பத்திரிகை சுதந்திர நாள் ; ஊடகவியலாளருக்கு திராவிட மாடல் அரசு அளித்த உதவிகள் என்னென்ன ?