Tamilnadu

கள்ளக்குறிச்சி விவகாரம் : Youtube-க்கு பேட்டியளிக்கும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை - நீதிமன்றம் உத்தரவு!

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் விசாரணை நல்ல முறையில் நடைபெற்று வருவதாக விசாரணை அமைப்புக்கு பாராட்டு தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் விரைவாக இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி, கனியாமூர் தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பூதாகரமாக வெடித்த நிலையில், தற்போது வழக்கு நடந்து வருகிறது. மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட தனியார் பள்ளியின் முதல்வர், தாளாளர், செயலாளர் ஆகியோருக்கு சமீபத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது.

இதனிடையே மாணவி மரண வழக்கு சம்மந்தமாக நடத்திய போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அண்மையில் மாணவி உடலுக்கு நடத்தப்பட்ட மறு உடற்கூராய்வில், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படவில்லை என்று தெரியவந்தது.

இந்த நிலையில், மாணவி மரண வழக்கு சம்மந்தப்பட்ட விசாரணை நல்ல முறையில் நடைபெற்று வருவதாக விசாரணை அமைப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்த இறுதி அறிக்கையை விரைவாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவும் பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதிஷ்குமார் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதில்,

  • ஊடக விசாரணை நடத்தக்கூடாது என உத்தரவிட்ட பிறகும் சில மின்னனு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இந்த விவகாரம் குறித்து நிபுணத்துவம் இல்லாத நபர்களிடம் நேர்காணல் எடுத்து ஒளிபரப்பப்படுகிறது.

  • ஜிப்மர் குழு, தனது அறிக்கையை தாக்கல் செய்த பிறகும் இந்த விவகாரத்தில் நிபுணத்துவம் இல்லாத வழக்கறிஞர்கள் சிலர் இரண்டு பிரத பரிசோதனை அறிக்கைகளையும் ஒப்பிட்டு மாறுபட்ட கருத்துகளை ஊடகங்களில் தெரிவித்து வருகிறது.

  • வழக்கறிஞராக இருந்து கொண்டு இதுபோல தனியாக விசாரணை நடத்துவது வழக்கறிஞர் தொழிலுக்கு ஏற்றது அல்ல; எனவே மாணவி விவகாரம் குறித்து ஊடகங்களில் விசாரணை நடத்தும் வழக்கறிஞர்களை கண்டறிந்து பார் கவுன்சில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றாத வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தயங்காது.

  • மாணவியின் மரண விவகாரத்தில் நடந்த சம்பவங்களை முழுமையாக வெளிக்கொண்டு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Also Read: இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் குழந்தைக்குக் கொலை மிரட்டல்: போலிஸ் விசாரணை!