Tamilnadu

கார் மீது மோதிய சொகுசு பேருந்து.. சிறுமி உட்பட 6 பேர் பலி: இரவில் டீ குடிக்க சென்றவர்களுக்கு நடந்த சோகம்!

சேலம் மாவட்டம், ஆத்தூர் கிரைன் பஜார் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். ஆட்டோ மெக்கானிக்கான இவர் கடந்த சில நாட்களுக்கு முன் உயிரிழந்தார். 30வது நாள் காரியத்திற்காக உறவினர்கள் அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். இரவு நேரத்தில் டீ குடிப்பதற்காக ஆம்னி காரில் ஆத்தூர் பேருந்து நிலையத்திற்கு 11 பேர் வந்து டீ குடித்தனர்.

பின்னர் அங்கிருந்து சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக வீடு திரும்பினர். காரை ராஜேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அப்போது ஈரோட்டிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற சொகுசுப் பேருந்து மீது ஆம்னி கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரை ஓட்டிய ராஜேஷ் (29), காரில் பயணித்த சந்தியா (20), சரண்யா (26), ரம்யா (25), சுகன்யா (28) ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் இருந்து வந்த ஆத்தூர் போலிஸார் காரில் இறந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.தொடர்ந்து படுகாயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த ஐந்து பேரையும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

படுகாயம் அடைந்த பொன்னுசாமி, கிருஷ்ணவேணி, சுதா, புவனேஸ்வரன், உதயகுமார், 11 வயது சிறுமி தன்ஷிகா மேல் சிகிச்சைக்காகச் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிறுமி தன்ஷிகா சேலம் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் இந்த விபத்தின் உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

துக்க நிகழ்வுக்காக வந்திருந்த உறவினர்கள் இரவு கண் முழிப்பதற்காக டீ குடிக்க சென்றவர்களில் 6 பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 12 வயது சிறுமியாக இருக்கும்போது பாலியல் வன்கொடுமை.. 30 ஆண்டுகளுக்கு பின்னர் புகார்.. உதவிய மகனின் DNA !