Tamilnadu

ஓடும் இரயிலில் இருந்து தவறி விழுந்த IIT மாணவி.. வெளிமாநிலத்தில் இருந்து படிக்க வந்தவருக்கு நேர்ந்த சோகம்!

ஒடிசா மாநிலம், சாம்பலூர் என்ற பகுதியை சேர்ந்தவர் மேகாஸ்ரீ (வயது 29). இவர் Phd முடித்து விட்டு, 3 மாத ஆராய்ச்சி பயிற்சி மேற்கொள்வதற்காக சென்னைக்கு வந்தார். சென்னையில் உள்ள ஐஐடி-யில் சேர்ந்த இவர், அதற்கு அருகிலேயே ஒரு வீடு எடுத்து தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இவர் தனது தோழியை பார்ப்பதற்காக ஆவடிக்கு மின்சார இரயிலில் சென்றிருந்தார். பார்த்து விட்டு மீண்டும் அதே மின்சார இரயிலில் வீடு திரும்பி கொண்டிருந்த மேகாஸ்ரீ, ஆவடிக்கும் ஹிந்து கல்லூரிக்கும் இடையே உள்ள இரயில் பாதையில் திடீரென தவறி விழுந்திருக்கிறார். இதில் அவரது தலை மற்றும் முகத்தில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இவரது சடலத்தை கண்ட இரயில்வே ஊழியர்கள், இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த அதிகாரிகள் மாணவியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து மாணவி தவறி விழுந்தாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக தருமபுரி மாவட்டம் மொரப்பூரில், இரயிலில் இருந்து தவறி விழுந்த காவலர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.