Tamilnadu

“ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கு : கொடூர சித்திரவதை.. ரத்தக் கறை படிந்த லுங்கி” : FIRல் CBI பதறவைக்கும் தகவல்!

மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிகிழமை, வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிபதி நாகலெட்சுமி முன் விசாரணைக்கு வந்தது. சி.பி.ஐ. தரப்பில் வழக்கில் 400 பக்கம் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டன.

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் முதற்கட்டமாக 2027 பக்கம் குற்றப்பத்திரிகை சி.பி.ஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக 400 பக்க கூடுதலாக குற்றப்பத்திரிகை சி.பி.ஐ-யால் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய தகவல்களின் விவரம் வருமாறு, ”சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகள், 19.06.2020 அன்று மாலை, காமராஜர் பஜாரில் இருந்து இறந்த ஜெயராஜை சட்டவிரோதமாக அழைத்துச் சென்று, அவர்கள் இருவரையும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கொடூரமாக சித்திரவதை செய்து, கடுமையான காயங்களை ஏற்படுத்தி உள்ளனர்.

அதன்பின்னர் தந்தை, மகன் இருவர் மீதும் பொய் வழக்கு பதிவு செய்து உள்ளனர். சாத்தான்குளம் காவல் நிலையத்தின் சுவர்களிலும், தரையிலும் மற்ற இடங்களிலும் பரவிய பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் ஆகியோரின் காயங்களில் இருந்து கசிந்த இரத்தத்தை சுத்தப்படுத்துமாறு குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகளால் இறந்த பென்னிக்ஸ் கட்டாயப்படுத்தப்பட்டார்.

குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஒரு பொதுவான நோக்கத்துடன் குற்றவியல் சதித்திட்டம் தீட்டி உள்ளனர். மேலும் , ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டால் இரத்தக் கறை படிந்த துணிகள் கவனிக்கப்படலாம் என்ற பயத்தால், பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் இருவரின் உடைகள் மீண்டும் மருத்துவமனையில் மாற்றப்பட்டன.

இறந்தவரின் துணிகளை மாற்றிய பிறகு, இறந்தவரின் இரத்தக் கறை படிந்த லுங்கிகளை குற்றம் சாட்டப்பட்ட போலிஸ் அதிகாரிகள் குப்பைத் தொட்டியில் வீசி உள்ளனர். சாத்தான்குளம் காவல் நிலைய சுவர்களில் இருந்த ரத்தம், இருவரையும் தாக்கிய லத்திகளில் இருந்த ரத்த கரை, தடயவியல் ஆய்வு முடிவில் உறுதியாகி உள்ளது. எனவே, சி.பி.ஐ-யின் குற்றசாட்டு உறுதியாகிறது.

இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், எஸ்.ஐ. ரகுகணேஷ், காவலர்கள் முருகன், சாமதுரை, முத்துராஜா, செல்லத்துரை ஆகியோர் காவல் நிலையத்தில் தந்தை - மகன் இருவரையும் துன்புறுத்தி உள்ளனர் விசாரணையில் உறுதியாகத் தெரியவந்துள்ளது.

தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து, இறந்த பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜை ஆகியோரை அநியாயமாக அடைத்து வைக்கும் நோக்கில் குற்றவியல் சதியில் ஈடுபட்டு உள்ளனர். என சி.பி.ஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிக் கையில் கூறப்பட்டு உள்ளது.

Also Read: தந்தை, 2 சகோதரர்களை கொலை செய்த மகன்.. போலிஸ் விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்!