Tamilnadu

‘‘பிரியாணிக்கு பதில் தக்காளி சோறு” : ரெய்டு நடந்த இடத்தில் குமுறும் அதிமுக தொண்டர்கள் !

தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது.

அதன்படி சமீபத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி மற்றும் கே.சி.வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனைகளில் கணக்கில் வராத பணம், முக்கிய ஆவணங்கள் சிக்கின.

இந்த நிலையில், தற்போது நாமக்கல் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த சோதனையில், கே.பி.பி.பாஸ்கர் பெயரிலும், அவரது மனைவி உமா பெயரிலும் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் பெயரிலும் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்துள்ளது தெரிய வந்தது.

இந்த வருமானம் அவர்களது சட்டப்படியான வருமானத்தை விட 315% அதிகமாகும். எனவே இது சம்பந்தமாக அவர்கள் மீது நாமக்கல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்துவருகிறது.

பொதுவாக அ.தி.மு.க நிர்வாகிகள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபடும்போது, அந்த பகுதியில் அ.தி.மு.க தொண்டர்கள் குவிவது வழக்கம். அப்படி ஆதரவாக குவியும் தொண்டர்களுக்கு காலை சாப்பாடு, மதிய சாப்பாட்டை அக்கட்சியே ஏற்பாடு செய்யும்.

இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டு ரெய்டில் எம்.எல்.ஏ-வுக்கு ஆதரவாக குவிந்த தொண்டர்களுக்கு மதிய உணவாக தக்காளி சோறு விநியோகிக்கப்பட்டுள்ளது. பிரியாணி போடுவதாக கூறி தக்காளி சோறு போடப்பட்டுள்ளதாக தொண்டர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டின்போது குவிந்த தொண்டர்களுக்கு உணவு விநியோகிக்கப்பட்டபோது, காலாவதியான குடிநீர் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “அ.தி.மு.க முன்னாள் MLA வீடு உட்பட 26 இடங்களில் IT ரெய்டு” : வருமானத்தை விட அதிகமாக 315% சொத்து குவிப்பு!