Tamilnadu

யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு.. தமிழ்நாடு அரசு எடுத்துவரும் சிறப்பு நடவடிக்கை பற்றி தெரியுமா?

காடுகளின் பாதுகாவலனாக உலாவரும் யானைகளைப் பற்றிய சிறப்பு செய்தி..

நீண்ட தந்தம், உயர்ந்த உடல், கம்பீர தோற்றம் என இவ்வுலகில் வாழும் விலங்குகளில் மிகப்பெரிய விலங்கான யானைகளுக்கு மகிழ்ச்சி, சோகம், இரக்கம், எச்சரிக்கை, உணர்வு ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றனர்.

உலகில் வாழும் விலங்குகளில் கண்ணாடியை பார்த்து தன்னை அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய விலங்குகளில் குரங்குகள், மாக்பை ( MAGPIE) எனப்படும் ஒரு வகை பறவை, டால்பின் அதற்கு அடுத்தபடியாக யானைகள் உள்ளன. யானைகளுக்கு பிடிக்காத ஒரு உயிரினம் என்றால் அது தேனி ஆகும்.

மனிதர்களுக்கு அடுத்தபடியாக மிக நீண்ட நாட்கள் வாழக்கூடிய உயிரினத்தில் ஒன்று யானைகள் ஆகும். "இயற்கையின் தலைசிறந்த படைப்பு யானை என்பார் பிரிட்டிஷ் கவிஞர் ஜான் டோன்" யானைகள் தனது உணவு மற்றும் தண்ணீரை தேவைகளை பூர்த்தி செய்ய தனது வழித்தடத்தில் தனது வாழ்நாள் முழுவதும் இடம்பெயர்ந்து கொண்டே இருக்கும்.

யானைகள் வயது முதிர்ந்த பெண் யானை தலைமையில் கூட்டமாக வாழக்கூடியவை. தமிழகம், கேரளா ,கர்நாடகா ஆகிய மூன்று மாநில வனப்பகுதியில் நூற்றுக்கணக்கான யானைகள் வாழ்ந்து வந்தாலும் தமிழ்நாட்டில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் போன்ற வனப்பகுதிகளில் உள்ள இயற்கை சூழல் காரணமாக யானைகள் அதிகளவு இந்தப் பகுதிகளில் வசிக்க ஆர்வம் காட்டுகின்றது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை காட்டுயானைகள் தந்ததற்காக கொல்லப்பட்டு வந்த நிலையில், யானைகளை வேட்டையாடும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு அளித்த கடுமையான தண்டனைகள் காரணமாக தற்போது தந்தத்திற்காக யானைகள் வேட்டையாடப்படுவது தமிழ்நாட்டில் 90 சதவீதம் குறைந்திருப்பது இயற்கை ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் வனப்பாதுகாப்பு சட்டம் கடுமையாக இருப்பதால் யானைகளின் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழ்நாட்டில் உள்ள யானைகள் கூட்டங்களில் அதிக அளவு குட்டிகளை ஈன்ற யானைகளையும் அதிகளவான குட்டிகளையும் நம்மால் பார்க்க முடிகிறது. அவ்வாறு யானைகள் எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம் காடுகளின் வளம் பேணிக்காக்க படுவது உறுதி செய்யப்படுகிறது.

தமிழ்நாடு மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் யானை- மனித மோதல் அதிகரித்து காணப்பட்டாலும், தமிழ்நாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சிறப்பான ஆளுமையால் யானை - மனித மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக வனத்துறைக்கு உத்தரவிட்டதன் பேரில் தற்போது நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் யானை - மனித மோதலை எவ்வாறு தடுக்க வேண்டும் என்பதை கண்டறிய தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரிய சாகு உத்தரவின்பேரில் ஐந்து பேர் கொண்ட வல்லுனர்கள் குழு அமைக்கப்பட்டு தற்போது ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

யானைகள் கிராமப் பகுதிக்குள் வருவதை தடுக்க வனப்பகுதிக்குள் யானைகளுக்கு பிடித்த உணவை வனப்பகுதிக்குள் வளர்ப்பதற்கான முயற்சியையும் தற்போது தமிழக அரசு கையில் எடுத்து மிக சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

அதேபோல் கிராம பகுதிக்குள் யானைகள் வருவதை தடுக்க அகழி அமைத்து கண்காணிப்பு, கூடலூர் போன்ற பகுதிகளில் யானை விரட்டும் குழுவினரை சிறப்பு பணியாளர்களை நியமித்து கண்காணிப்பு பணி போன்ற சிறப்பான பணிகளை தமிழக அரசு கையில் எடுத்து வருகிறது. இதன் மூலம் இன்னும் இரண்டு ஆண்டு காலங்களில் யானை- மனித விலங்கு மோதல் முற்றிலும் தடுப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

நாடு செழிக்க வேண்டும் என்றால் காடுகள் செழிக்க வேண்டும், காடுகள் செழிக்க வேண்டும் என்றால் அதில் யானைகள் வாழ வேண்டும், யானைகள் வாழ வேண்டுமென்றால் மனிதர்கள் வன விலங்குகளுடன் ஒன்றிணைந்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும். யானைகளை பாதுகாத்தால் மட்டுமே காடுகள் பாதுகாக்கப்படும் என்பதால் தமிழக அரசு காடுகளையும் யானைகளையும் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இன்று சர்வதேச உலக யானைகள் தினம்.

Also Read: சர்வதேச யானைகள் தினம் : 10 ஆண்டுகளில் 1,000 யானைகள் பலி - காணாமல் போகும் ‘பேருயிர்கள்’ !