Tamilnadu

மாமல்லபுரம் பண்ணையில் இருந்து 1,000 முதலைகள் குஜராத்திற்கு இடமாற்றம் - நீதிமன்றம் உத்தரவு : என்ன காரணம் ?

மாமல்லபுரத்தில் இயங்கி வரும் முதலை பண்ணையில் கூடுதலாக இருக்கும் 1000 முதலைகளை குஜராத் மாநிலம் ஜாம் நகர் மாவட்டத்தில் உள்ள விலங்கியல் மறுவாழ்வு மையத்திற்கு இடமாற்றம் செய்ய மத்திய மாநில அரசு துறைகள் அனுமதியளித்ததை எதிர்த்து சென்னை சிந்தாதிரிபேட்டையை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஏ. விஸ்வநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், 56 முதலைகளை மட்டுமே வைக்கக்கூடிய 7300 சதுர மீட்டர் இடத்தில் 1000 முதலைகள் அடைக்கப்போவதாகவும், இடமாற்றம் செய்ய அனுமதியளித்தது சட்டவிரோதம் என அறிவித்து, அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், இந்த பூங்காவுக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக சி.பி.ஐ. அல்லது சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய அமர்வு, குஜராத்தில் உள்ள விலங்குகள் மறுவாழ்வு மையத்தில் ஆயிரம் முதலைகளை பராமரிக்க போதுமான இட வசதிகள் உள்ளது என்பது மறுவாழ்வு மையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புகைப்பட ஆதாரங்களில் இருந்து தெளிவாக தெரிவதால் மனுதாரர் கோரிக்கையை ஏற்க முடியாது என உத்தரவிட்டனர்.

மேலும், முதலைகள் இடமாற்றம் செய்ய சட்டப்படி முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், நிபுணர்களும் அந்த மையத்தில் உள்ள வசதிகள் குறித்து திருப்தி தெரிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

Also Read: “‘Soft முதலமைச்சர்’ என்று யாரும் கருதிவிட வேண்டாம்..” : அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த முதலமைச்சர் !