Tamilnadu

சேலத்தில் கஞ்சா விற்பனை.. Door Delivery செய்து வந்த அதிமுக நிர்வாகி அதிரடி கைது !

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சி வந்த பிறகு கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 'ஆபரேஷன் கஞ்சா 2.O' என்ற பெயரில் காவல்துறையினர் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதி அருகே கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக காவல்துறைக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் ரகசியமாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஆத்தூர் அருகே உள்ள உடையார்பாளையம் பகுதியில், பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்குரிய வகையில் சில பொட்டலங்களை டோர் டெலிவரி செய்து கொண்டிருந்தார்.

அவரை அதிகாரிகள் மடக்கி விசாரித்ததில், சந்தேகம் வலுத்தது. இதையடுத்து அவர் வைத்திருந்த பொட்டலங்களை பிரித்து பார்க்கையில் அதில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவரை கைது செய்து விசாரித்த போது, அவர் நரசிங்கபுரம் நகராட்சி 16-வது வார்டு அ.தி.மு.க., அம்மா பேரவை செயலாளர் ரமேஷ் என்பது தெரியவந்தது.

தொடர்ந்து விசாரித்ததில் அவர், வாட்ஸ் அப் மூலம் கஞ்சா பொட்டலங்களை ஆர்டர் எடுத்து, அதனை கேட்கும் நபர்களுக்கு நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் டோர் டெலிவரி செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து ரமேஷிடம் இருந்து 40 கஞ்சா பொட்டலங்கள் மற்றும் அவர் வைத்திருந்த வாகனத்தையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "பாஜக ஆட்சிக்கு வந்தால் பள்ளிகளில் 'பகவத் கீதை' கட்டாயம்.." - மேற்கு வங்க பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு !